Header Ads



டுபாயிலும், உகண்டாவிலும் பதுக்கி வைத்துள்ளதாக NPP குறிப்பிட்ட சொத்துக்களை நாட்டுக்கு கொண்டுவர வேண்டும்


முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை இயற்றி உகண்டா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்படும் சொத்துக்களை நாட்டுக்கு கொண்டு வாருங்கள். முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம். இந்த நிதியை கொண்டு வந்து  கடன்களை செலுத்துங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்துக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம். இயற்றப்படும் சட்டங்கள்  சிறந்த விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும். தவறானதாக பயன்படுத்தக் கூடாது. ஆயுதச் சட்டம் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரானதாக பயன்படுத்தப்பட்டதை அனைவரும் நன்கறிவோம்.


இந்த சட்டத்தை இயற்றி நீங்கள் குறிப்பிட்டதை போன்று உகண்டா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை நாட்டுக்கு கொண்டு வாருங்கள். முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம். இந்த நிதியை கொண்டுவந்து  கடன்களை செலுத்துங்கள்.


பாராளுமன்றத்தில் குழுக்களும் முறையற்ற வகையில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ  வாகனம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் அதாவது 2021.01.28ஆம் திகதி வாகனம் இறக்குமதி செய்துள்ளதாக ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர்  கோப் குழுவில்  குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது.


யோஷித ராஜபக்ஷ 2014.01.28ஆம் திகதி வாகனத்தை இறக்குமதி செய்து 7 வருடங்கள் பயன்படுத்தியதன் பின்னர் 2021.01.28ஆம் திகதி விற்பனை செய்துள்ளார். திகதியை மாற்றிக்கொண்டு பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு பொய்யுரைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 


No comments

Powered by Blogger.