16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், பயிற்சியாளரை தேடி வலைவீச்சு
16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சனிக்கிழமை (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.
16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(மு.தமிழ்ச்செல்வன்)
Post a Comment