கருணைக்கான ஓர் உதாரணம் இது...
சல்மானுல் ஃபாரிஸி (ரலி) சத்தியத்தைத் தேடி பாரசீகத்திலிருந்து புறப்பட்டவர். மதீனாவில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, யூதனின் வதைச் சிறையில் அவதிப்பட்டார். துடியாய் துடித்தார். விடுதலைக்கு ஏங்கினார்.
செய்தியறிந்த நபிகளார், விடுதலைப் பத்திரம் எழுதுமாறும் எஜமான் கேட்கும் தொகையைக் கொடுக்கலாம் என்றும் சல்மான் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்.
யூதனோ, 40 ஊக்கியா தங்கம், 300 பேரீத்த மரக்கன்றுகள் என்று இஷ்டத்திற்கு நிபந்தனை விதிக்கிறான். (ஓர் ஊக்கியா என்பது ஏறக்குறைய 123 கிராம் தங்கம்)
உடனே நபிகளார் ஒரு போரில் தமக்குக் கிடைத்த செல்வத்தைக் கொடுத்தவாறு தமது தோழர்களிடம், "உங்கள் சகோதரருக்கு உதவுங்கள்'' என்றார்கள்.
பெரும் போராட்டத்திற்குப் பின்பு சல்மான் (ரலி) விடுதலை பெறுகிறார்.
வரலாற்றில் விளிம்பு நிலை மனிதர்கள் மீது காட்டப்பட்ட கருணைக்கான ஓர் உதாரணம் இது.
இது கருணையின் மாதம். அல்லாஹ்வின் கருணை அதிகமாக இறங்கும் மாதம்.
அவனது அருளுக்கு அளவே இல்லை. எனவேதான் அவன் அளவற்ற அருளாளன். அவனது அன்புக்கும் நிகர் இல்லை. எனவேதான் அவன் நிகரற்ற அன்புடையோன்.
குர்ஆன் கூறுகிறது: "கருணை புரிவதை அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்'' (6:12)
யாரிடமும் எதற்காகவும் தன்னைக் கடமைப்படுத்திக் கொள்ள தேவையற்ற அல்லாஹ்... தானாக வலிய வந்து படைப்புகளுக்குக் கருணை காட்டுவதைக் கடமைப்படுத்திய அல்லாஹ்.. அதை இங்கே பிரகடனப்படுத்தவும் செய்கிறான். எனில் அவனது கருணையை என்ன சொல்லி அழைப்பது?!
ஆயினும், "அல்லாஹ்வின் அருள் நன்மை செய்யும் நன்னடத்தை கொண்ட மக்களுக்கு அருகில் இருக்கிறது'' (7:56) என்கிறான் அல்லாஹ்.
எனவே இந்த நல்ல நாட்களில் ஏழைகளை மகிழ்வியுங்கள். அவர்களின் கவலைகளில் பங்கு பெறுங்கள். விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள். உதவும் கரங்களாக மாறுங்கள். இருப்பவற்றில் ஒரு பங்கை ஈந்து உதவுங்கள்.
மண்ணில் இருப்பவர் மீது கருணை காட்டினால் விண்ணில் இருப்பவன் நம்மீது கருணை காட்டமாட்டானா என்ன..!
✍️ நூஹ் மஹ்ழரி
Post a Comment