Header Ads



டியூட்டரிகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்


(அஸ்லம் எஸ்.மெளலானா)


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை 2025.03.25 ஆம் திகதி தொடக்கம் 2025.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பதாவது;


பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக நோன்பு மற்றும் நோன்புப் பெருநாள், தமிழ், சிங்கள புதுவருடம், க.பொ.த (சா/த) பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தங்கள் உயர்தர வகுப்புக்கான கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கான கால அவகாசம் வழங்குதல் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு அவற்றின் நடத்துனர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்.


அவ்வாறு செயற்படத் தவறும் கல்வி நிலையத்திற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன் - என்று கல்முனை மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த அறிவித்தல் கடிதத்தின் பிரதிகள் கண்காணிப்பு மற்றும் உரிய நடவடிக்கைகளுக்காக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர், கல்முனை, சாய்ந்தமருது மற்றும்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.