Header Ads



நீதிமன்றத்தில் இன்று முக்கிய, வழக்கு விசாரணை

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனவும், வரி செலுத்த வேண்டியிருந்தால், சட்ட ரீதியாக செயல்பட வேண்டும் என்றும் முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், 


"நான் தனிப்பட்ட ரீதியாக நினைப்பது என்னவெனில், நாட்டில் ஒரு சட்டம் இருந்தால், நாம் அந்தச் சட்டத்திற்கு தலைவணங்க வேண்டும். நாட்டில் வரி செலுத்த வேண்டும் என்றால்... நாம் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து சட்டத்தை மதிக்க வேண்டும்." 


"கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் கிரிக்கெட் விளையாடும்போது நல்ல சம்பளம் வாங்கினேன். இப்போது நடுவராக நல்ல சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் கிரிக்கெட் விளையாட்டின் ஊடாக கிடைக்கிறது" என்றார். 



இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித்தலைவர்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி, அவர்களுக்கு வரி அறவிடும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் முடிவை செல்லுபடியற்றதாக்குமாறு இரு தலைவர்களும் மனுவில் கோரியுள்ளனர். 


இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.