Header Ads



இம்தியாஸ் மக்களிடையே செல்வாக்குமிக்க ஒருவர், அவரது ராஜினாமா கட்சிக்கு பாரிய இழப்பாகும்


கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. இதன் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


இம்தியாஸ் பாகீர் மாக்கார் பதவி விலகியமைக்கான காரணம் என்ன என்பது தெரியாது. எவ்வாறிருப்பினும் பதவிகளிலிருந்து அது கட்சிக்கு பாரிய இழப்பாகும். அண்மையில் கட்சி பயணிக்கும் பாதை அதன் எதிர்காலம் தொடர்பிலும் அவர் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.


இம்தியாஸ் பாகீர் மாக்கார் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவராவார். ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பாரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றார். எனவே அவரது இராஜநாமா கடிதத்தை கட்சி உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை.


வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் நிர்வாகக் குழு கூடவுள்ளது. இதன் போது இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். எவ்வாறிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து எவரையும் இழக்கவோ நீக்கவோ நாம் எதிர்பார்க்கவில்லை.


கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. எமது கட்சியினரை மாத்திரமின்றி எமது கொள்கைகளுடன் இணங்குபவர்களுடனும் இணைந்து பயணிப்பதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.


இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து சஜித் பிரேமதாசவுடன் முன்னோக்கிப் பயணிப்பதே எமது இலக்காகும். இம்தியாஸின் பதவி விலகின் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிக்கின்றோம் என்றார். 


(எம்.மனோசித்ரா)



No comments

Powered by Blogger.