Header Ads



காசா விவகாரத்தில் வெளிநாட்டமைச்சின் ஊடகச் செய்தி அரசாங்கத்தின் கண்டன அறிக்கை அல்ல


உக்கிரம் அடைந்து வரும் காசா விவகாரத்தில் அரசாங்கத்தின் சார்பில் ,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி அரசாங்கத்தின் கண்டன அறிக்கை அல்ல என்றும், மூன்றே மூன்று வரிகளைக் கொண்ட அந்த செய்தியில் இஸ்ரவேலின் அடாவடித்தனத்தையோ, அதற்கான அமெரிக்காவின் ஆதரவையோ கண்டிக்கும் ஒரு சொல் கூட இல்லாதது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.


 அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,


புனித ரமழான் மாதத்தில், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலஸ்தீன முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காசா மீது பாரிய தாக்குதல்களை நடத்தி ,அங்கு இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலின் ஈனச் செயலை பல்வேறு உலக நாடுகளும் கண்டித்தும்,அந் நாட்டுக்கு எதிராக சில ராஜதந்திர நடவடிக்கைகளையெடுத்தும் இருக்கும் சந்தர்ப்பத்தில் ,இந்த மனிதாபிமான விடயத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த விதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதாரபூர்வமான அறிக்கையொன்றை வெளியிட்டதோடு,அது பற்றி பாராளுமன்றத்திலும் உரையாற்றி இருந்தார் .நானும் அதைப்பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன். இந்தப் பின்னணியில், வெறுமனே அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (21) ,யாரும் கையொப்பம் இடாத ஓர் உப்புச்சப்பற்ற ஊடகச் செய்தியை மட்டும் வெளியிட்டு ,இந்நாட்டு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்கு எத்தனித்துள்ளதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம்.


  அரசாங்கம்,இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.


(ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் ஊடகப் பிரிவு)







No comments

Powered by Blogger.