இன்ஸ்டாகிராம் விருந்துபசாரத்தின்போது பொலிஸார் திடீர் பாய்ச்சல் - 58 பேர் கைது
பமுனுகம, உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்துபசாரம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்கு பொலிஸாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (23) இரவு நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அங்கு தங்கியிருந்த 7 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், அவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment