முஸ்லிம் சிவில் நிறுவனங்கள், இளம் தலைமுறையிடம் கையளிக்கப்படுமா..?
எமது நாட்டிலும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் குறிப்பிட்டதொரு சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்றுதான் எமது நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைமைத்துவம் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோசம் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எமது நாட்டினைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளன. டி.பி. ஜாயா, ஏ.எம்.ஏ. அஸீஸ், பாக்கீர் மாக்கார், சேர் ராசீக் பரீட் போன்ற பழம்பெரும் தலைவர்களினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இன்று வரை செயற்பட்டு வருகின்றன. எனினும், அவற்றின் தலைமைத்துவங்கள் இன்று வரை இளைஞர்களுக்கு வழங்கப்படாமை கவலையளிக்கும் விடயமொன்றாகும்.
எமது நாட்டினைப் பொறுத்தவரையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் இலங்கை கல்வி மாநாடு, தேசிய சூறா சபை, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, சோனகர் இஸ்லாமிய சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னனிகளின் சம்மேளனம் எனப் பல அமைப்புகள் தேசிய ரீதியாக செயற்பட்டு வருகின்றன. எனினும், இவற்றின் தலைமைத்துவங்கள் இன்று வரை இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு சிலரே அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவினரே குறித்த பதவிகளை தொடர்ச்சியாக அலங்கரித்து வருகின்றனர். சங்கிலிக் கதிரை போன்று முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பதவிகள் குறிப்பிட்ட சிலர் மத்தியில் தொடர்ச்சியாக மாறிமாறி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அதேவேளை, இளைஞர் என்ற பெயரில் காணப்படுகின்ற அமைப்புக்களிலும் கூட முதியோர்களே தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை அலங்கரிப்பதையும் காண முடிகின்றது.
இதன் ஊடாக குறித்த அமைப்புக்கள் உருவாக்கப்பட்ட நோக்கமே மழுங்கடிக்கச் செய்யப்படுகின்றது. முஸ்லிம் சிவில் அமைப்பினை உருவாக்கி கட்டியெழுப்பியவர்களே மரணிக்கும் வரை அதன் முக்கிய பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.
எவ்வாறாயினும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களை உருவாக்கி கட்டியெழுப்பியவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என நாம் கூறவில்லை. மாறாக, அடுத்த தலைமைத்துவத்தினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதற்காக எதிர்காலத்தில் தலைவர்களாக வரக்கூடியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றுமே வலியுறுத்த விரும்புகிறோம்.
அதேபோன்று இளைஞர்களுக்கு தலைமைத்துவத்தினை வழங்கி அவர்களின் வழிகாட்டியாகவும் ஆலோசகர்களாகவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து பயணிக்க வேண்டும். இதுவே முன்மாதிரியான செயற்பாடாகும்.
இது போன்று தலைமைத்துவ பதவிக்கு வருகின்ற இளைஞர்கள், மூத்த மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களை ஓரங்கட்டாமல் அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். மூத்த உறுப்பினர்களின் அனுபவத்தினை ஆலோசனையினையும் பெற்றுச் செயற்பட்டால் மிகவும் வினைத்திறனாக குறித்த சிவில் அமைப்பினை முன்கொண்டு செல்ல முடியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான எம்.எச்.எம். அஷ்ரப், தனது மரணத்திற்கு முன்னரே கட்சியின் அடுத்த தலைவராக ரவூப் ஹக்கீமினை அடையாளப்படுத்தினார். இந்த அடையாளப்படுத்தலை முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் இன்றைய தலைவர்களோ முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களோ மேற்கொள்ளவில்லை. இதனால், தலைவர்களின் மரணத்தினை தொடர்ந்து அடுத்த தலைவரை தெரிவுசெய்யும் போது பல பிளவுகள் ஏற்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, முஸ்லிம் சிவில் அமைப்புக்களில் இரண்டாம் நிலையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையின்மையும் காணப்படுகின்றன. இதனை தங்களுக்கு சாதகமாக சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் பயன்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது.
துடிப்பாக செயற்படுகின்ற ஒரு இளைஞனிடம் தலைமைத்துவத்தினை கையளிக்காமல், அவர் வயோதிபத்தினை எட்டிய பின்னர் சுறுசுறுப்பாக இயங்க முடியாத காலத்தில் அவரிடம் தலைமைத்துவத்தினை ஒப்படைப்பதன் ஊடாக எந்தவொரு பயனையும் சமூகம் காண முடியாது.
இதனால், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைமைத்துவ பதவிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலைமைத்துவத்திற்கு வருகின்ற இளைஞர்கள் மூத்த உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.
துடிப்பும் அனுபவமும் இணைகின்ற போது குறித்த சிவில் அமைப்புகளை வினைத்திறனானதாக மாற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு தேவையான அழுத்தங்களை முஸ்லிம் சமூகம் பலமாக வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
சமூகத்திலுள்ள பிரதான சிவில் அமைப்புகளின் தலைமைத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதன் ஊடாக சிறந்த பலன்களைப் பெற முடியும். இலங்கை முஸ்லிம்களை நோக்கி வரக்கூடிய நெருக்கடிகளையும் சவால்களையும் இவர்கள் மூலம் எதிர்கொள்ள முடியும் என்பது நிச்சயம்!
Vidivelli
Post a Comment