Header Ads



ஜனாஸாவை அடக்க முடியாததால் பெரும் பரபரப்பு


திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்யமுற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் பொலிஸார் இன்று(12)தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 


https://www.facebook.com/share/v/14twSWnmNS/


குறித்த காணி அரிசி மலை பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள புனித பூமி என விகாராதிபதி தெரிவித்ததை அடுத்தே பொலிஸார் அங்கு சென்றதாகவும் இதன் பின்னர் உரிய தரப்புக்களுடன் அரச உயரதிகாரிகள் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின் குறித்த ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 


இது தவிர அண்மையில் திரியாய் கிராம சேவகர் பிரிவில் உள்ள வலத்தாமலை விவசாய பகுதியில் தங்களது விவசாய நிலங்களை இயந்திரம் மூலமாக உழுத போது தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தொல்பொருட்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார். குறித்த பகுதி விவசாய நிலம் மக்களுக்கு சொந்தமான போதும் விவசாயம் செய்ய விடாது அப்பகுதி விகாராதிபதி தடுத்து நிறுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பெரும்போக விவசாயம் செய்ய முடியாது உள்ளதாக தெரிவிக்கின்றனர். 


குறித்த விகாராதிபதி புனித பூமி என கூறி அப்பகுதியில் கட்டிடம் விகாரை என அமைத்து வாழ்ந்து வருவதாகவும் 82 ஏக்கர் அளவில் விவசாய நெற்செய்கைக்கான மக்கள் காணிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தொடர் போராட்டம் ஊடாக மக்கள் தங்களது உரிமைகளுக்காக பாடுபடுகின்ற போதும் நிரந்தர தீர்வு இல்லை என தெரிவிக்கின்றனர். 


அமெரிக்காவை தளமாகக கொகொண்டு இயங்கும் காணி தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான ஓக்லன்ட் அறிக்கையின் படி கிழக்கு மாகாணத்தில் அதிகமான நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியாக குச்சவெளி பிரதேச செயலக பிரிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே தற்போது நாடாளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ளது வேட்பாளர்கள் சரியான நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்பார்களா என அம் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

No comments

Powered by Blogger.