Header Ads



அம்பாறையில் வெள்ளம் தேங்கி காணப்படும் வீதிகள்



- பாறுக் ஷிஹான் -

அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக   மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட  பிரதான போக்குவரத்துபாதைகள் சில  வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை(13) இன்று (14) திடிரென ஏற்பட்ட அடைமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு ,கல்முனை,சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ,பிரதேச  பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.


மேலும் குறித்த மழை காரணமாக வீடுகள் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் அவற்றை வெளியேற்றும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில்  திடிரென  மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.


சில வீதிகளில் வடிகான்களுக்கு மேலாக மழை நீர் பரவுவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை பொது மக்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.


இந்நிலையில் வடிகான்களை விரைந்து சீர்செய்யுமாறு கல்முனை மாநகர சபையிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.