Header Ads



விரக்தியடைந்த சுஜீவ கண்டியில் போட்டி, மகளினால் அஸ்தமிக்கும் கிரியெல்லவின் அரசியல்


முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உுறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான சுஜீவ சேனசிங்க இம்முறை கண்டியில் போட்டியிடவுள்ளார்.


தற்போதைக்கு சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படுகின்றார்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சஜி்த் பிரேமதாசவின் பிரசார நடவடிக்கைகளை இவர் ஒருங்கிணைத்திருந்தார்.


ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதை தொடர்ந்து சுஜீவ சேனசிங்க, அரசியலை விட்டும் ஒதுங்கும் தீர்மானத்தில் இருந்தார்.


எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் இம்முறை கண்டி மாவட்ட தலைமை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான லக்‌ஷ்மன் கிரியெல்லவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


கண்டி மாவட்ட மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான லக்‌ஷ்மன் கிரியெல்ல, மிக நீண்ட காலமாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும் உள்ளார்.


அவரது புதல்வி சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல அண்மைக்காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனிக்கும் நெருக்கமானவராக மாறியுள்ளார்.


அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமிந்திராணி கிரியெல்லவை கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்குமாறு ஜலனி பரிந்துரைத்துள்ளார். சமிந்திராணியும் அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.


அதன் காரணமாக லக்‌ஷ்மன் கிரியெல்லவுக்குப் பதில் இம்முறை கண்டி மாவட்டத்தில் சமிந்திராணி போட்டியிடவுள்ளார்.


இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாகவேனும் இம்முறை தனக்கான நாடாளுமன்ற வாய்ப்புக் கிடைக்கும் என்று லக்‌ஷ்மன் கிரியெல்ல எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கும் வாய்ப்பில்லை என்று கட்சி உயர்மட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து லக்‌ஷ்மன் கிரியெல்ல அரசியல் நடவடிக்கைகளை விட்டும் முற்றாக ஒதுங்கி ஓய்வெடுக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


 

No comments

Powered by Blogger.