Header Ads



பெண்களே, இது உங்களுக்கான பதிவு


அரேபிய இலக்கிய மரபில் (وصية) எனும் மரண சாசனம், நற்கட்டளை அல்லது வாழ்வியல் உறுதிப்பத்திரம் என்பது ஜாஹிலிய காலம் தொட்டு பிரபலமான ஒரு மொழிநடை சார்ந்த சொல்வழக்கு முறையாகும். 


அந்தவகையில் உமாமா பின்த் ஹாரிஸ் என்ற பெண்மணி பாசமாக வளர்த்த தனது மகளை  கினதா கோத்திர அரச குமாரனுக்கு திருமணம் செய்து அனுப்பும் போது சொல்லிக் கொடுத்த பத்துக் கட்டளைகளும் இலக்கியப் பிரசித்தி பெற்றவைகள்.


கலைநயம் மிக்க அழகிய மொழி நடையில், ஆழ்ந்த அர்த்தங்களையும் உன்னதமான உபதேசங்களையும் சுமந்து நிற்கும் அக்கட்டளைகளை திருமண பந்தத்தில் இணையும்   ஒவ்வொரு மணப்பெண்ணும்  படித்துப் பயன்பெற வேண்டியது காலத்தின் தேவையாகும். காரணம், அவைகள்  மிக உருக்கமான ஆணைகளாகும், சிறந்த  வாழ்வியல் பொக்கிஷங்களாகும், நன்நடத்தை சார்ந்த அருமையான விழுமியங்களாகும்.

"எனதருமை மகளே!

✍நல்ல குடும்பப் பெண் என்பதற்காக, அல்லது நல்லொழுக்கமாக வளர்ந்தவள் என்பதற்காக ஞான போதனைகள் கைவிடப்படும் என்றிருந்தால் உனக்காக அதை நான் கைவிட்டிருப்பேன். உன்னிடம் சொல்லாது மடித்து மூடி வைத்திருப்பேன். ஆனாலும் அவைகள் பராமுகமாக இருப்போருக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும், புத்திசாலிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.!

அருமை மகளே!

✍ பெற்றோர்களின் கரிசனை போதும் என்பதற்காக, பொறுப்போடு கடைசி வரை அவர்கள் அரவணைத்துக் கொள்வார்கள் என்பதற்காக ஒரு  பெண்ணுக்கு வாழ்கைத் துணை தேவையில்லை என்று வருமானால் உனக்குத்தான் கணவன் என்ற தேவையே வந்திருக்காது. ஆனாலும் பெண் இனம் படைக்கப்பட்டது ஆண்களுக்காக! அதுபோல் ஆண் இனம் படைக்கப்பட்டது பெண்களுக்காக!

அருமை மகளே!

✍ நீ வளர்ந்த கூட்டிலிருந்து, ஆளான வீட்டிலிருந்து பழக்கமில்லாத துணையோடு, முன்னறிமுகம் இல்லாத வீட்டிற்கு புகுந்து விடப்போகிறாய்!

உன்னை அவன் கரம் பிடிப்பதால் உனக்கான ராஜாவாக அவன் மாறிவிடப் போகிறான்!

நீ அவனுக்கு தொண்டு செய்யும் ராணியாக இருந்தால் அவன் உனக்கு தொண்டு புரியும் ராஜாவாக இருப்பான்!

உனக்கு நான் பத்துக் கட்டளைகளை புத்திமதியாக கற்றுத் தருகிறேன். அவைகளை நீ பேணி நடந்தால் அது உனக்கு ஏணிப் படியாகவும் வாழ்க்கை வழியாகவும் இருக்கும்...! 

கட்டளை 1️⃣

👉 போதுமென்ற மனதோடு அவனுடன்  இணைந்து வாழ வேண்டும்! 

ஏனெனில், போதுமென்ற மனதில் ஆத்துமானந்தம் இருக்கிறது...!

கட்டளை 2️⃣

👉 'கேட்டோம், கட்டுப்பட்டோம்' என்று இதமாக அவனுடன் உறாவாட வேண்டும்...!

ஏனெனில், கேட்டு கட்டுப்பட்டு வாழ்வதில் இறை திருப்தி கிடைக்கிறது...!

கட்டளை 3️⃣

👉 அவன் விழிகள் உன்னை நோட்டமிடும் சமயங்களை அவதானித்துக் கொள்...!

அவலமான நிலையில்  நீ இருக்க, அவன் உன்னை காணக்கூடாது...!

கட்டளை 4️⃣

👉 அவன் மூக்கின் நுகர்வு உன்னை மோப்பம் பிடிக்கும் நேரங்களில் அவதானமாக இருந்து கொள்...!

உன்னிடமிருந்து ஆசையூட்டும் நறுமணத்தை மாத்திரமே அவன் நுகரட்டும்...!

கட்டளை 5️⃣

👉 அவன் உணவு உட்கொள்ளும் நேரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்...!

ஏனெனில், பசியின் கொடுமை கோபத்தை வரவழைக்கும்...!

கட்டளை 6️⃣

👉 அவன் உறங்கும் நேரத்தில் அவதானமாக இருந்து கொள்...!

ஏனெனில், உறக்கத்தை களைப்பது வெறுப்பை வரவழைக்கும்...!

கட்டளை 7️⃣

👉 அவன் இல்லத்தை பராமரிப்பதில், சொத்தை பாதுகாப்பதில் அக்கறையோடு இருந்து கொள்...!

நல்ல பராமரிப்பும், நல்ல பாதுகாப்பும் முன்மாதிரியான இல்லத்தரசியின் அடையாளமாகும்...!

கட்டளை 8️⃣

👉 அவனையும் அவனது குடும்பத்தையும் அனுசரித்து நடக்கப் பழகிக் கொள்...!

நல்ல வரவேற்பும் உபசரிப்பும் முன்னுதாரணமான குடும்பத் தலைவியின் பண்பாகும்...!

கட்டளை 9️⃣

👉 அவனது ரகசியங்களை வெளிப்படுத்தாதே...!

ஏனெனில், நீ ரகசியங்களை வெளிப்படுத்தினால் அவனது சூழ்ச்சிக்கு ஆலாகலாம்...!

கட்டளை 🔟

👉 அவனது கட்டளைக்கு மாறு செய்யாதே...!

ஏனெனில், நீ அவனது கட்டளைக்கு மாறு செய்வதால் மனக்கடுப்பை அவனிடம் ஏற்படுத்தி விடுகிறாய்...!

எனதருமை மகளே...!

மேலும் கேட்டுக்கொள்! 

மனதில் பதித்து வைத்துக்கொள்! 

💗  அவன் மனச்சஞ்சலமாக இருக்கும் தருணம் நீ மனக்களிப்பாக இருப்பதை தவிர்த்து கொள்...!

ஏனெனில், இந்தக் குணம் பொறுப்பற்ற செயலாகும்...!

💗 அவன் மனமகிழ்ச்சியாக இருக்கும் தருணம், நீ மனவருத்தத்துடன் இருப்பதை தவிர்த்து கொள்...!

ஏனெனில், இந்தக் குணம் கொந்தளிப்பை ஏற்படுத்தும் செயலாகும்...!

💗 நீ அவனை எவ்வளவு மதித்து நடக்க முடியுமோ அவ்வளவு மதித்து நட...!

அவன் உன்னை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி வைப்பான்...!

💗 அவனோடு நீ  இணக்கமாக  இருக்கும் காலமெல்லாம் அவன் உன்னோடு கை கோர்த்து வருவான்...!

மகளே...! தெரிந்து கொள்...!

♥️ உன் விருப்பத்தை விட அவன் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுக்காத வரை, உனது மனநிறைவை விட அவனது மனநிறைவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வரை அவனிடமிருந்து நீ ஆவலுடன் எதிர்பார்க்கும் பாசத்தையும் நேசத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது...!

♥️ உன் விருப்பும் வெறுப்பும் அவனது விருப்பு வெறுபில்தான் தங்கியுள்ளது...!

♥️ அந்த இறைவன் உனக்கு நல்வாழ்வு வழங்கட்டும்...!

அவன் பாதுகாப்பு என்றும் உன்னை சூழட்டும்...!"

பின்னர் அவள் மணப்பெண்ணாக அங்கு  அனுப்பப்பட்டாள், அங்கே அவள் போற்றப்படும் பெண்ணாக திகழ்ந்தாள். யெமன் தேசத்தை தொடர்ந்து ஆண்ட ஏழு அரச குமாரர்களையும் பெற்றடுத்த தாய் என்ற பெருமையும் அவளுக்கு கிடைத்தது. 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.