Header Ads



மகிந்தவிற்கு கடன் வழங்கினோம்


2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காகக் கடனாக வழங்கிய பணம் இதுவரையில் கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


தம்புத்தேகம  பகுதியில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது சாதாரண மக்கள் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் அரசியல் தரப்பினர் ஒரு ஒப்பந்தத்தினூடாக கொழும்பு  உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைக் கொள்வனவு செய்கின்றனர்.


அவ்வாறானவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு ஒரு தொகை தரகு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.


ஆரம்பத்தில் சாதாரண உந்துருளிகளில் பிரசார செயற்பாடுகளுக்காகச் சென்றவர்கள் இன்று பல இடங்களில் மாளிகைகளை அமைத்துள்ளனர்.


2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவிற்கு தேர்தலுக்கான இறுதி துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவதற்குப் பணம் இருக்கவில்லை. நாம் கடனாகக் குறித்த பணியை முன்னெடுத்திருந்தோம்.


எனினும் இதுவரையில் அந்த கடன் தொகை செலுத்தப்படவில்லை. அவ்வாறானவர்கள் பின்னர் உலக நாடுகளிலும் இலங்கையின் பல பகுதிகளிலும் வீடுகளையும் மாளிகைகளையும் நிர்மாணித்துள்ளனர்.


2015ஆம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாகத் தெரிவித்து பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க பின்னர், மத்திய வங்கியில் கைவைத்தார்” என அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.