Header Ads



சஜித்துக்கும், அனுரவுக்கும் பேசிக் கொண்டிருக்க மட்டுமே முடியும் - ஜனாதிபதி


வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை  உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஶ்ரீலங்கா'  வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.


இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும் போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.


எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.


இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:


''2022 இல் நான் இந்த பகுதிக்கு வந்த போது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன். நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசையுகத்தை நிறைவு  செய்ய முடிவு செய்தேன். 2023 இல் நான் வரும் போது வரிசைகள் இருக்கவில்லை. விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுத் தந்தீர்கள். இவ்வாறு தான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா? 


நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றோம். நிபந்தனைகளுடன் உதவி கிடைத்தது. உதவி பெற வேறு வழியிருக்கவில்லை. இந்தியாவிடமிருந்து 3.5 பில்லியன் கிடைத்தது. அது தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேரிட்டது. விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. 


எவ்வாறு முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம் என்பது இந்த தேர்தலிலே முடிவாகும். பிரச்சினைகள் வந்த போது மற்ற தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன். இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைகுமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள். இவ்வாறு பல நொண்டிச்சாக்குகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022 இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷத்தைப் போன்று நாடு மாறியிருக்கும்.


சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறனவர்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும். அடுத்த 5 வருடங்களுக்கான 'இயலும் ஶ்ரீலங்கா' திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.


வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்த வேண்டும்.  வரியைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். கடன் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டுமா? 


பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பெண்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தடுக்க சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை நிலையங்களை அமைக்க இருக்கிறோம். குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குழப்பம் செய்யும் ஆண்கள் இனி கவனமாக இருக்க வேண்டிவரும். பெண்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.


இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம். மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம்.. கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களிப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம். 


இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். 1977 இல் நான் இங்கு வந்த போது தேவநாயகம் அமைச்சராக இருந்தார். நல்லையாவைப் பற்றியும் அறிந்திருந்தேன். எனது தந்தை ஹோட்டலொன்றை ஆரம்பித்தார். அதற்கு அருகில் தான் பிள்ளையானின் கிராமம் இருந்தது. கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன். ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும். சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம். சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.


இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் "இயலும்". சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.