Header Ads



புத்தளத்தில் நாசகார போதைப் பொருட்கள் மீட்பு


புத்தளம் - சேரக்குளி கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் இருந்து ஒருதொகை போதை மாத்திரைகள் நேற்று (06) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி, கஜபா ஆகிய கடற்படையினர் குறித்த கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதன்போது, குறித்த காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இரண்டு கார்ட்போர்ட் பெட்டிகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.


இதன்போது குறித்த இரண்டு பெட்டிகளிலும் (Pregabalin Capsules) எனும் வகையைச் சேர்ந்த 35470 போதை மாத்திரைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த போதை மாத்திரைகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகளால் சந்தேக போதை மாத்திரைகள் அடங்கிய உரமூடைகளை காட்டுப் பகுதியில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.


இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 35,470 போதை மாத்திரைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, இந்த வருடம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 136,798 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.


-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.