Header Ads



ஜனாஸாக்கள் எரிந்த போது போது ரணிலும், அநுரவும் மெளனம் காத்தனர்


இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்ச மோசமான கொள்கை ஒன்றை கையாண்டமையால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது. 


இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் அன்று பீதியுடனான கொள்கையொன்றை பின்பற்றி மௌனமாக இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அச்சமின்றி நாம் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுத்து, கோட்டாபய ராஜபக்சவின் பிழையான செயற்பாட்டிற்கு எதிராக வெளிப்படையாக  குரல் கொடுத்தோம். எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் என இன, மத பேதங்கள் இன்றி நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கே முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 55 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 14 ஆம் திகதி நிந்தவூர் நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். அத்தோடு சர்வதேச தரத்திலான இளைஞர் மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக இளம் தலைமுறையினருக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழிக்கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு என்பவற்றை பெற்றுக்கொண்டு, சிறந்த தேர்ச்சியையும் ஆளுமையையும் விருத்தி செய்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அத்தோடு விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்கி, குறைந்த தொகையில், குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம். இதற்கு மேலதிகமாக மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வறுமை அதிகரித்து காணப்படுகின்றமையால் நாட்டு மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனவே வறுமையை ஒழிப்பதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, அதனூடாக வரிய குடும்பம் ஒன்றுக்கு 24 மாதங்களுக்கு மாதம் ஒன்று தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கி வறுமையை போக்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.