Header Ads



குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் எனது, தலையை பரிசோதிக்க சொல்கிறார் அநுரகுமார


(அஸ்லம் எஸ்.மெளலானா)


அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபச்சார விடுதிகளும் சட்டப்படி திறக்கப்படும் என்று நான் கூறிய கருத்துக்கு அவர் பதிலளிப்பதை விடுத்து எனது தலையை பரிசோதிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


மாளிகைக்காடு பிரதேசத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (17) இரவு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த பிரசாரக் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம். எச். நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா மேலும் தெரிவிக்கையில்


தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபச்சார விடுதிகளும் சாராய தவறணைகளும் சட்டப்படி திறக்கப்படும். அவற்றை எதிர்த்து பள்ளிவாசல்களில் கூட உலமாக்கள் பேச முடியாது.


அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்து விட்டே நான் மீண்டும் மீண்டும் இதனைக் கூறி வருகின்றேன்.


அவ்வாறுதான் முஸ்லிம்கள் தமது பெருநாட்களைக் கூட அந்தந்த தினங்களில் தனித்துவமாகக் கொண்டாட முடியாது. அனைத்து மதத்தினருக்குமான பெருநாட்களை ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்றுகூடி குடித்து கும்மாளமடித்தே கொண்டாட முடியும்.


இவையெல்லாம் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லா இடங்களிலும் கூறி வருகின்றேன்.


ஆனால் எனது இக்குற்றச்சாட்டுகளுக்கு அநுர இன்னும் பதிலளிக்கவில்லை. மாறாக அவரது சாய்ந்தமருது பிரசாரக் கூட்டத்தில் எனது தலையை பரிசோதிக்க வேண்டும் என்று கூறிச் சென்றுள்ளார். இவ்வாறு மழுப்பலாக சில கதைகளைச் சொல்கிறாரே தவிர எமது குற்றச்சாட்டுகளை மறுத்து சரியாக இன்னும் பதிலளிக்கவில்லை - என்றார்.

No comments

Powered by Blogger.