Header Ads



பேஸ்புக் மோசடியில் பங்கேற்ற 2 பேர் கைது


தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த யுக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நாட்டில் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.


விளம்பரத்தைப் பார்க்கும் நபர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் இணைக்கப்பட வேண்டும்.


இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் கடத்திச் செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.


இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், உனவட்டுன பிரதேசத்தில் இருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விடயத்தை கண்டறிந்துள்ளனர்.


இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர்.


கைதான இருவரும் யுக்ரைன் பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது.


கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.