Header Ads



ஜனாதிபதி தேர்தலும் 1.65 மில்லியன் முஸ்லிம் வாக்குகளும்



- ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸஹைர், முன்னாள் Mp -


எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், வங்குரோத்து நிலை காரணமாக நாடு தனது பொருளாதார வளத்தை இழந்த பின்னர், இலங்கையில் நடைபெறும் தேசிய மட்டத்திலான முதலாவது தேர்தலாகும். கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்கள் வாக்குகளின்பெறுமதி குறித்தும் முன்னரை விட தற்போது அதிக விழிப்புணர்வுடன் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. தாங்கள் தவறான முடிவை எடுத்தால், குறிப்பாக இந்த நாட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் தமது வாழ்வாதார இருப்பை தக்கவைத்தல் என்பனவற்றில், பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும்  வாக்காளர்கள் நன்கு அறிவார்கள். 


2022  மார்ச் இல் தொடங்கிய மாபெரும் மக்கள் போராட்டமான 'அரகலய' வை ஜனாதிபதி என்ற சூடான இருக்கையில் அமர்ந்திருக்கும் எவரும் ஒருபோதும் மறக்க முடியாது. இந்தக் கதிரையில் அமரவுள்ள வருங்கால ஜனாதிபதி தனது பதவிக்காலம் முழுவதும் அன்றைய தலைவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் இரண்டு அம்சங்களை நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். 


முதலாவதாக,பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார திவால் நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிரான தேசிய கூக்குரல் அல்லது கோஷம் என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தாலும் மறந்துவிடக் கூடாது. பெரும் இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நாட்டில் பெரும் துன்பம், பசி மற்றும் மக்களின் கோபத்துக்கு அந்த திவால் நிலை வழிவகுத்தது. 


ஆர்ப்பாட்டக்காரர்கள், இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் என்று ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டினர். அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையில்  பரந்த அளவிலான  தாங்கமுடியாத அதிகரிப்பு, ஏராளமான இலங்கையர்களின் குடிப்பெயர்வு என எல்லாவற்றுக்கும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டன.

  

இரண்டாவதாக, முன்னணி வகித்த இளைஞர்கள் தலைமையிலான தேசிய கூக்குரல், அனைத்து இன-மதப் பிரிவுகளையும் தாண்டி நாட்டின் மக்கள் தொகையின் எல்லா பிரிவுகளையும் ஒன்றிணைத்தது.  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனத்தையும் மதத்தையும் பயன்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய மீது இளைஞர்களும் சங்கைக்குரிய மதகுருமாரும் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக அவர் ஜனாதிபதி பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 


கூக்குரல், செயல் இழக்கச்செயப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ளாமல் அது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று யாராவது கருதினால்,, அது நாட்டிற்கு பெரும் செலவை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய தவறாவே இருக்கும். வீதியில் உள்ள மனிதர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்பு, நாடு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


எதிர்வரும் தேர்தலின் முடிவுகள் நாடு ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது என்பதைக் காட்டும் என்று நான் தைரியமாக கணிக்கிறேன், நாட்டை கூட்டாக ஆட்சி செய்த அதே அமைச்சரவை அமைச்சர்களையும்,  அதே நிர்வாக அதிகாரிகளையும் வெளியேற்றும் ஒரு உண்மையான ஜனநாயக மாற்றமாக அது அமையும். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினதும் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையின் கீழ் இலங்கையை ஆட்சி செய்தது அதே மொட்டு குழுதான். 


தற்போது நிலவும் பொருளாதார கஷ்டங்கள், நெருக்கடிகள் மற்றும் துன்பங்களுக்கு காரணமானவர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு எதிராக ஒரு வலுவான தீர்ப்பை நாடு தழுவிய ரீதியில் அடுத்த  தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அந்த ஒற்றை வளையத்திற்குள் தான் இருக்கிறார்  வெளியேற்றப்பட்ட மொட்டு அணியின் ஒரு பகுதியாகவே அவரும் பார்க்கப்படுகிறார், எனவே நாட்டின் பேரழிவுகரமான வீழ்ச்சிக்கு அவரும் சமமாக பொறுப்பேற்க வேண்டியுள்ளது. 

 

ரணில் மற்றும் நாமல் ஆகிய இருவரும் நாட்டில் தத்தமக்கான ஆதரவு தளங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் இரண்டு தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தியுள்மையானது அந்த தளங்களின் சாதகமான வாக்கு தளத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. மொட்டு தரப்பு ஏற்கனவே கூறுகளாகப் பிளவுபட்டுள்ளது. 


மேலதிகமாக ரணில் தரப்பு வடக்கு வாக்கு பலத்தையும் ஓரளவு தமிழ் சுயேட்சை வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனிடமும், மற்றும் ஓரு பகுதியை சஜித் பிரேமதாசாவின் எஸ். ஜே. பி. யிடமும் இழந்துள்ளது. மாவை சேனாதிராஜா தலைமையிலான ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வழி நடத்தும் தமிழ் அராசுக் கட்சி, எஸ். ஜே. பி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என உறுதியளித்தது. இந்தியப் பிரதமர் மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் சமீபத்தில் இங்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 

தமிழ் தலைவர்கள் உட்பட நாட்டின் அரசியல் தலைவர்களை தோவல் சந்தித்தார். ஏற்கெனவே ரணில்,மொட்டுடனான அவரது ஆத்திரமூட்டும் கூட்டணியைத் தொடர்ந்துள்ளதால், கிறிஸ்தவ வாக்கு வங்கியை பெரும்பாலும் எஸ்.  ஜே. பி-யிடம் இழந்துள்ளார். உயிர்த்த  ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க முடிந்தும் கூட அதை செய்யத்  தவறிய அப்போதைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்தவ திருச்சபை தொடர்ந்து முனவைத்த கோரிக்கைகளை ரணில் புறக்கணித்து வந்துள்ளார்.    

1.65 மில்லியன் முஸ்லீம் வாக்கு வங்கியில் 90% க்கும் அதிகமானவை ரணிலுடன் எப்போதும் இருந்ததில்லை, ஏனென்றால் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மொட்டு தரப்பினால் விதிக்கப்பட்ட "கூட்டு தண்டனையை" ரணில் தரப்பும் தொடர்ந்தது. முஸ்லிம் பெயர்களைக் கொண்ட கிட்டத்தட்ட எட்டு நபர்களின் குற்றங்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த “கூட்டு தண்டனயை” கவனிக்காமல், விட முடியாத அளவுக்கு அது கடுமையானது.   


"ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியின் கீழ் முஸ்லீம் சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட இந்த" "கூட்டு தண்டனையின்" "சில மாதிரிகளைப் பார்ப்போம், இது ரணிலின் கீழும் தொடர்ந்தது. மேலும் தேர்தல் அன்று, முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்வோம். 


தௌஹீத் அமைப்புகள், தப்லிக் இயக்கம் மற்றும் சவுதி அரேபாவின் புத்தி ஜீவியான மரியாதைக்குரிய முஹம்மது இப்னு அப்துல்-வஹாபின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பல மரியாதைக்குரிய உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மாறாக, குறிப்பாக 2012 முதல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை நடத்திய சிங்கள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, 


பின்பு, 2014 மற்றும் 2018 க்கு இடையில், நாட்டில் பல “முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களுக்கும்” வழிவகுக்கப்பட்டன.  இவை அனைத்தும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பங்களித்தன என்று, நாடாளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

என்பனவற்றின் இரண்டு அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி தெளிவாகின.   


2014 இல் அலுத்கம வில் தொடங்கி நாட்டில் பல முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களை நடத்தியவர்கள், இந்த வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரியவர்கள் என்று கூறப்படும் எவர் மீதும் எந்த விதமான வழக்குகளும் போடப்படவில்லை, ஆனால் பல இடங்களில் முஸ்லிம்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டனர்.


2019 ஏப்பிரல் 21 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர், 50 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, ஆனால் கோத்தாபய அல்லது ரணில் அரசாங்கங்களின் கீழ் எவர் மீதும் இதற்கெதிராக வழக்குகள் தொடரப்படவில்லை. 


பல முஸ்லிம் சிவில் அமைப்புகள், எந்த விசாரணைளும் இன்றி வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டன. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவால்  பரிந்துரைக்கப்பட்ட ஏழு சிங்கள தீவிரவாத அமைப்புகளில் ஒனறேனும் ஒருபோதும் தடை செய்யப்படவில்லை.


புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் சாகிர் நாயக்கின் வழிகாட்டலில் இயங்கிய, இலங்கை முஸ்லிம்களாளும் மற்றும் உலகம் முழுவதும் முஸ்லிம்களால் பரவலாக விரும்பி பார்க்கப்பட்ட 'பீஸ் டிவி'  ஒளிபரப்புகள் எந்த விளக்கமும் இல்லாமல் தடைசெய்யப்பட்டன. மேலும் இன்றுவரை அதன் சேவைகள் மீள வழங்கப்படவில்லை. 


பள்ளிவாசல்களை  நிர்வகிப்பது பற்றி எந்த அறிவும் இல்லாத முஸ்லிம் அல்லாத பெண் ஒருவர் முஸ்லிம் விவகாரத் தணைக்களத்தின் பணிப்பாளராக விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.


அந்தந்த சமயங்களின் விவகாரங்களை நிர்வகிக்க ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த சம்பந்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த அமைச்சர்களை நியமிக்காமல் ரணில் விக்கிரமசிங்க அரசிலும் பெளத்த விவகார அமைச்ரே பள்ளிவாசல் விவகாரங்களயும் கட்டுப்படுத்தினார்.


இஸ்லாமிய நூல்கள் மீள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டி முஸ்லிம் பாடசலைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இஸ்லாமிய நூல்கள் விநயோகிக்கப்படுதை  கல்வி அமைச்சும் நிறுத்தியது. 


இஸ்ரேல் பாலஸ்தீனர்களை படுகொலை செய்யத் தொடங்கிய நான்காவது மாதத்திற்குப் பிறகு, பெப்ரவரி 2024 இல் கொழும்புக்கும் இஸ்ரேலிய நிர்வாகத் தலைநகரான டெல் அவிவிற்கும் இடையிலான நேரடி விமான சேவையை விமானப் போக்குவரத்து அமைச்சர் தொடங்கி வைத்தார், ஒரு நாளைக்கு சராசரியாக 160 பலஸ்தீன பொதுமக்ளை படுகொலை செய்து பாலஸ்தீனத்தை அழிக்கும் இஸ்ரேலிய போர் இப்போது 12 வது மாதத்திற்குள் நுழைகிறது. 


பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கையர்களை இஸ்ரேலிய யுத்த பிராந்தியத்துக்கு அனுப்பினார். இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போதிலும் அவற்றை திரும்பப் பெற அவர் இன்றுரை மறுத்துவிட்டார்.


உச்ச நீதிமன்றம் இந்த அமைச்சரை அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியபோது, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதே நபரை தனது  வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசகராக நியமித்தார்.

 
கொழும்புக்கான அமெரிக்க தூதர் (மகிழ்ச்சியுடன்) பாத்பைண்டர் நிறுவனத்தின் கூட்டத்தில் பேசும்போது இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ள யெமன் ஹவுத்திகளை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா ஒரு கப்பலை பரிசாக அனுப்பியுள்ளதாகவும் அதை இ,லஙகை கடற்டை பயன்படுத்துவதாகவும் அறிவித்தார்.

 

இவ்வாறான கப்பல்களில் எதையாவது ஹவுத்திகள்​​ ஒரு  வேளை அழித்திருந்த்தால் அது இலங்கையில் மேலும் அதிக முஸ்லிம் எதிர்ப்பு அலைகளுக்கு  வழியமைத்திருக்கும்.  தீவிரவாத இஸ்ரேலிய அரசாங்கத்தின் கைகளில் சிக்கி அழிவை எதிர்கொள்ளும் பலஸ்தீனர்களுக்கு ரணில் எந்த அனுதாபத்தையும் காட்டவில்லை. 


எஸ். ஜே. பி தலைவர் சஜித் பிரேமதாச தைரியமாக இஸ்ரேலை ஒரு "பயங்கரவாத நாடு" என்று வர்ணித்தார் , இவ்வாறு குறிப்பிட எந்தவொரு முஸ்லிம் தலைவர்களுக்கோ அல்லது அரசுகளுக்கோ கூட துணிச்சல் இருக்கவில்லை​

 
தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், மத்ரஸாக்களில் சமயக் கல்வியில் தலையிடும் ​ராஜபக்ஷ பிரிவின் முன்மாதிரியை விக்கிரமசிங்க அரசாங்கம் அப்படியே தொடர்ந்தது. 


மேலும், சவூதி அரேபியாவிலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஏற்கனவே இலங்கையில் இருக்கின்ற முந்தைய பதிப்பின் மறுபதிப்பான தமிழ் மொழிபெயர்ப்பு புனித குர்ஆனின் பிரதிகள், இலங்கை அதிகாரிகளால் ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளன. 


அந்த புனித குர்ஆன் பிரதிகள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் உள்ளன, ரணில் அரசாங்கத்திற்கு இதற்காக  இனிமேலும் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்.


தற்போது மரங்கள், எலிகள், விஷப் பாம்புகள் மற்றும் முயல்கள் நிறைந்த காடுகளால் மூடப்பட்டிருக்கும் 'சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள்' என்ற சவூதி அன்பளிப்பை பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. 


அல்கொய்தா மற்றும் ஐ. எஸ். ஐ. எல். அமைப்புகளுக்கு நிதியளித்ததாகக் கூறி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றசம்சாட்டி ஐ. நா. சட்மொன்றின்  அடிப்படையில் ஏராளமான இலங்கை முஸ்லிம்கள் அரசாங்கத்தால் பெயரிடப்பட்டு பட்டியல் இடப்பட்டனர். இந்த பயங்கரவாத நிதியுதவி பட்டியலில் பெயரிடப்பட்ட அவர்களில் பலர், ஏற்கவே இலங்கையில் உள்ள அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டவர்கள்! 


நிலுவையில் உள்ள விஷயங்கள் பலவற்றில் உடனடி முடிவுகளை எடுக்காமல், அதிகாரிகளால் பலர் துன்புறுத்தப்பட்ட பல நிகழ்வுகளையும் இங்கு மேற்கோள் காட்டலாம். பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை அரசு அதிகாரிகள் துன்புறுத்திய சில நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டியும் உள்ளன. 


கோத்தாபய  மற்றும் ரணில் அரசாங்கங்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட சில கூட்டு தண்டனைகள் இன்னும் அமுலில் உள்ளன. இந்த  அச்சுறுத்தல்களுக்கும் அவை ஏற்படுத்தி உள்ள அச்சங்களுக்கும் மத்தியில் வாழ முஸ்லிம்கள் விரும்பவில்லை.  


ஒரு சில உள்ளூர் முஸ்லிம் தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முயற்சித்த போதிலும், 90% மான முஸ்லிம் வாக்காளர்கள் ரணிலுக்கோ அல்லது நாமலுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். இனவாத கலவரங்கள் தொடர்பான அச்சத்தின் கீழ் அவர்கள் வாழ விரும்பவில்லை.

 
அடுத்து தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சிறுபான்மையினரை “பேய்களாக”ப் பார்க்கும் மிகப்பெரிய தவறைச் செய்யக்கூடாது. போரின் போது முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்க பாத்திரத்தை வகித்தனர் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டியது அவசியம், ஆனால் 2012 முதல் நோர்வேயால் மூளைச் சலவை செய்யப்பட்ட பெரும்பான்மை தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டனர், இதுவே பல முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் வழிவகுத்தது.


இன்றைய நிலையில் மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் இராஜபக்ஷவை முந்தி, ரணில் தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் நிலை இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்பு அல்லது அதற்குப் பிறகும் கூட ரணில் நாமலுடன் கைகோர்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் பலர் முன்கூட்டியே எதிர்பார்க்கிறார்கள். 


தன்னுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு எஸ். ஜே. பி மற்றும் என். பி. பி ஆகிய இரு கட்சிகளுக்கும் ரணில் விடுத்த பல வெளிப்படையான வேண்டுகோள்கள், அவர் கடுமையான நெருக்கடியில் இருப்பதை அவர் உணர்ந்துள்ளதையே அம்பலப்படுத்தி உள்ளது.


 ரணிலின் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ள எஸ். ஜே. பி மற்றும் என். பி. பி என்பனவற்றுக்கு இடையிலே​யே முதலாம் இடத்துக்கான கடும்போட்டி நிலவுகின்றது. 

No comments

Powered by Blogger.