Header Ads



ரணிலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைத்தது இறைவனின் ஆசிர்வாதமாகும்


சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும். மக்களின் இதயத்தை தொடக்கூடிய இந்த சின்னம், நிச்சயமாக ரணிலை வெற்றிபெறச் செய்யும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,''மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க முக்கியமாகும்.


ரணில் இல்லை என்றால் சமையல் எரிவாயு இல்லை. அந்தளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறது. ரணில் விக்ரமசிங்க இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.


நாட்டு மக்கள் சமையல் எரிவாயுக்காக வரிசையில் இருந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தார்.


ரணில் விக்ரமசிங்கவின் இந்த மகத்தான பணிக்கு இறைவனின் ஆசிர்வாதமாகவே அவருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருக்கிறது.


சமையல் எரிவாயு வரிசையின் நினைவுகளுடன் சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.


எனவே ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் எவ்வாறு சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட ஏனைய வரிசை யுகத்துக்கு தீர்வு கண்டாராே அதேபோன்று மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார சுமைக்கும் தீர்வுகாண்பார். அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


ஒருசில வேலைத்திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பயனாகவே அஸ்வெசும போன்ற நிவாரண திட்டங்களை வழங்கி வருகிறோம்.


அதனால் ரணில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை மக்கள் தேர்தலில் காட்டுவார்கள்.''என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.