Header Ads



அதிரடியாக பாய்ந்த, தேர்தல்கள் ஆணைக்குழு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.


மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.


ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்துகொண்ட போதிலும் அதனை வீடியோவாக பதிவு செய்து அரசு சொத்துகளை முறைகேடு செய்தமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மஹரகம பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இந்த மாநாடு நேற்று காலை மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் பெருமளவான இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.


பிரதம அதிதியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் பல்வேறு பிரதேசங்களில் இருந்து இளைஞர்களை வரவழைத்து இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர்.


அங்கு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக உழைக்குமாறு கூறினார்.


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம், அரசாங்க உத்தியோகத்தர் என்ற வகையில் அரசாங்க சொத்தை துஷ்பிரயோகம் செய்து வேட்பாளரை ஊக்குவிக்கும் விதத்தில் இவ்வாறான கூட்டத்தை ஏற்பாடு செய்வது அல்லது கூட்டத்தில் உரையாற்றுவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இளைஞர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட உணவு மற்றும் பானங்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


ஜனாதிபதி பிரசன்னமாகியிருந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இது தொடர்பான சந்திப்பை காணொளியில் பதிவு செய்து சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.


இந்த கூட்டத்தை நடத்துவதற்கு மண்டபத்தை முன்பதிவு செய்வதற்காக பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் நடன குழுவிற்கு பணம் வழங்கப்படவில்லை எனவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.