Header Ads



இந்துப் பெண் ஆகிய நான், எப்படி பள்ளிவாசலுக்குச் செல்வேன்..? மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்


கேரளாவில் வைரலாக பகிரப்பட்ட ஒரு சகோதரியின் முகநூல் குறிப்பு. 


வெளியே ஏதோ பயங்கர சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தேன். 


கவனித்துக் கேட்டபோது, பக்கத்திலுள்ள பள்ளி வாசலிலிருந்து உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டேன்.


பலர் சேர்ந்து தக்பீர் சொல்கின்றனர். விடியற்காலை பாங்கு சொல்வதற்கான நேரமாகவில்லை. 


“நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. 

அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்“

என்றும் தக்பீருக்கிடையே அவர்கள் கூறுகின்றனர்.


இதைக் கேட்டதும் தொட்டிலில் உறங்கிக் கிடக்கும் குழந்தையை வாரி எடுத்து, மற்றவர்களையும் எழுப்பி வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.


அதற்குள் வீட்டு முற்றத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அப்போதும் பள்ளி வாசலிலிருந்து தக்பீர் தொனி நிறுத்தப்படிருக்கவில்லை.


வெளியே வந்த நான் சுற்றிலும் பார்த்தேன். கும்மிருட்டு,  இந்தக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்த நடுச்சாமத்தில் நான் எங்கு செல்வேன் இறைவா……..!


மீண்டும் பள்ளியிலிருந்து அறிவிப்பு. 

யாரும் வெளியே நிற்க வேண்டாம், 

பள்ளி வாசலுக்கு வாருங்கள்!.


ஆண்கள் மட்டும் செல்லும் அந்தப் பள்ளிவாசலுக்கு,  இந்துப் பெண்ணான நான் போக முடியுமா? பயத்தால் தொண்டை வரண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்கும்போது பள்ளி வாசலிலிருந்து சிலர் டார்ச்சு லைட்டுடன் எங்களை நோக்கி வந்தனர்.


“சகோதரி இந்தப் பிள்ளைகளுடன் இங்கே நிற்காதீர்கள். 

பள்ளி வாசலுக்கு வாருங்கள்“ என்று அழைத்தனர் அவர்கள். அப்போதுதான் மகிழ்ச்சி வரும்போது கண்ணீர் வரும் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.


பள்ளிக்குச் சென்றபோது, எல்லா ஜாதி, மதத்தினரும் அங்கேயிருப்பதைக் கண்டேன். 


காலை புலர்ந்தபோது பள்ளியின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது எங்கள் வீட்டின் கூரையை மட்டுமே காண முடிந்தது.


பள்ளியின் மின் விசிறி ஊக்கில் பழைய சாரியால் கட்டிய தொட்டிலில் மகளை தூங்கச் செய்துக் கொண்டிருந்தபோது ஒரு பழைய சம்பவம் நினைவு வந்தது.


ஒரு நாள் மைதீனுடன் எனது கணவரின் தம்பி ஹரி வீட்டிற்கு வந்தான்.


ஒரு பேப்பரை நீட்டி என்னிடம் சொன்னான் “அண்ணி! இதில் கையொப்பமிட்டு தாருங்கள்!”


“எதற்காகக் கையெழுத்து என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேப்பரை நான் வாங்கியபோது. என்னுடைய மகன் அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்து பார்த்து விட்டு “அம்மா இதில் கையெழுத்திட வேண்டாம். சித்தப்பாவுக்கும், மைதீன் காக்காவுக்கும் பைத்தியம்” என்றான்.


மகன் இப்படிச் சொன்னபோது மைதீன் சொன்னான் “உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.”


அந்தப் பேப்பரை நான் படித்துப் பார்த்தேன். மாவட்ட ஆட்சியருக்கு எழுதப்பட்ட ஒரு புகார் மனு அது.. 


“ஐயா! எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கட்டடம் கட்டுகின்றனர். 


அது ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் என்று அறிந்தோம். 


கட்டடம் கட்டி முடிந்தால் அங்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி எங்கள் பிள்ளைகள் படிப்பதற்குச் சிரமத்தை உருவாக்கும். எனவே அந்தக் கட்டடம் கட்டுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும்”


அந்தப் பேப்பரைக் கீறி எறிந்து விட்டு “குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமா?” என்று அவர்களிடம் கேட்டேன். 


“இதற்கான விளைவை நீங்கள் அனுபவிப்பீர்கள்“ என்று சொல்லி விட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர். 


அவர்கள் சொன்னது சரிதான். 


நான் அனுபவிக்கின்றேன். இந்த பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், அதில் ஒரு பங்கு எனது மக்களின் கைகளுக்குக் கிடைக்காமலிருப்பதில்லை. 


இன்று அந்தப் பள்ளி மினாராவின் ஒலிபெருக்கி எங்கள் உயிர்களை காப்பாற்றியது.


அன்றைய அந்த சம்பவத்தை நான் எண்ணிப் பார்க்கின்றேன். ஹரியை அனைவரும் அறிவர். 


அவன் இப்போது பழைய ஹரி அல்ல. 


ஆனால் இந்த மைதீன் ....?.


இந்த உலகத்தின் மிகப் பெரிய பிரச்சனை, தவறான எண்ணம். யாரோ ஒருவர் சொல்வதை நம்பி விடக் கூடாது. 


சத்தியத்தைத் தேடி புரிந்துக் கொள்ள வேண்டும். 


கவளப்பாறை நிலச் சரிவின்போது இறந்து போனவர்களின் போஸ்ட்மார்ட்டம் பள்ளி வாசலில் நடந்தது.


சமீபத்தில் வயநாடு #குன்னம்பற்றயில் இறந்த சந்தோஷ் என்பவரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட இடம் #பள்ளி_வாசல்.


ஒரு முஸ்லிம் அல்லாத ஏழைப் பெண்ணின் திருமணம்,   சேரமான் பள்ளியில் நடைபெற்றது


பிரளய காலத்தில் மக்கள் பள்ளிகளிலும், கோவில்களிலும், சர்சுகளிலும், மதரஸாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும் தூங்கினர். பள்ளிகளுக்கும், கோவில்களுக்கும் இதுபோன்ற ஏராளமான நன்மைகளின் க தைகள் சொல்வதற்கு உண்டு.


எனவே முதலில் மனிதன் ஆக வேண்டும். 

அதன்பின் போதும் ஜாதியும், மதமும்.......


ஒரு ஆபத்தில் சிக்கி நடுரோட்டில் வீழ்ந்து கிடக்கும் போது வந்து உதவுபவர் யாரென்றோ, கடைசியில் ஒரு துள்ளி தண்ணீர் தருபவர் யாரென்றோ முற்கூட்டி அறிய முடியாத காலம்வரை எவ்வித வகுப்பு வாதத்துக்கும் இடமில்லை...

No comments

Powered by Blogger.