Header Ads



இம்தியாஸ் விட்டுக்கொடுத்த பதவி, மீண்டும் அவர் வசமாகிறது - கட்சித் தலைவர் சஜித் தீர்மானம்


ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக செயற்பட்டு வந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் உட்பட கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் நீக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.


அவரது நடவடிக்கைகள் குறித்த ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என்றும் இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதோடு, நேற்று முன்தினம்(16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் பிரதானி சுஜீவ சேனசிங்கவும் இதனை உறுதிப்படுத்தித் தெரிவித்திருந்தார். 


அவ்வாறே, தன்னை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் என கூறி சரத் பொன்சேகா கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய மக்கள் சக்திக்கு இடைக்கால தடை விதிப்பையும் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகத்துக்கு எதிராக, சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவொன்றின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம், வெற்றிடமாகும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், கட்சியின் யாப்புருவாக்குநர்களில் ஒருவரும், சிரேஷ்ட உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். 


அன்று முதல் இன்று வரை அரசியல் வாழ்வில் தனது நல்லபிப்பிராயத்தை காப்பாற்றி வரும், 

ஆளுந் தரப்பு, எதிர்தரப்பு அனைவராலும் விரும்பப்படும், மதிக்கப்படும் ஓருவரான

இம்தியாஸ் போன்ற ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருப்பது இந்த தருணத்தில் கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.


ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஓருசிலர் தவிசாளர் பதவிக்கு வேறு சிலரின் பெயர்களை முன்மொழிந்து வருவதாகத் தெரிகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கம் முதலே கட்சியை நல்ல பாதையில் இட்டுச் செல்வதில் இம்தியாஸின் கடும் உழைப்பு ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என சகலரும் தெரிந்த உண்மையாகும்.


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஸ்தாபித்ததன் உண்மையான நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் சமூகமயப்படுத்துவதற்கும், கட்சியின் இரண்டு முக்கிய கொள்கைகளான சமூக ஜனநாயக கொள்கை மற்றும் முற்போக்கு தேசிவாத கொள்கைகளை மக்கள் மயப்படுத்துவதற்கும், அரசியலில் நம்பிக்கையிழந்து அரசியலை விட்டு தூரமாகி இருக்கும் அனைத்தின இளையோர் சமூகம் அடங்களாக புதிய வாக்காளர்களை கட்சியின் கொள்கைகளுக்கு ஆகர்ஷிக்கவும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்றவர்கள் சமகால அரசியல் பின்னனியில் மிகவும் பொருத்தமானவர் எனக் கருதியே அவருக்கு இந்நியமணத்தை வழங்க கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். 


அவ்வாறே, இலங்கையின் அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பல்வேறு இடதுசாரி தரப்பின் முக்கிய புள்ளிகளும் சமூக ஜனநாயக கொள்கையின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்து வரும் இவ்வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியை அதன் மாறாத கொள்கைகளோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் சரியாக ஸ்தானப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளுக்கும், கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொறுத்தமானவர் என்பதனாலயே சஜித் பிரேமதாச இத்தீர்மானத்துக்கு வந்துள்ளார். 


இம்தியாஸ் போன்ற ஒருவரை தவிசாளராக நியமிப்பதன் மூலம், மேலும் பலரையும், சிவில் சமூகத்தினது ஆதரவையும் வெகுஜன ஆதரவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் திருப்பலாம் என கருதப்படுகிறது.


அவ்வாறே, அவரை மீண்டும் களுத்தறை மாவட்டத்தின் தலைவராகவும், களுத்தறை மாவட்ட தேர்தல் அரசியலுக்கு வருமாறும் கட்சி விடுத்த அழைப்பை இம்தியாஸ் நிராகரித்துள்ளார். 


அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து கொண்ட டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையினரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை களுத்தறை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு பிரவேசிக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளனர். 


ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம், உயர்நிலை பிரதான பதவி நிலைகளுக்கு கட்சியின் வருடாந்த அல்லது கட்சியின் விசேட சம்மேளனம் ஒன்றின் மூலமாகவே நியமணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


தவிசாளர் பதவியை இம்தியாஸுக்கு வழங்குவதற்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தீர்மானித்துள்ளதோடு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி மாநாட்டில் அது நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் பதவியை ஏற்று எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் இம்தியாஸிடம் சஜித் பிரேமதாச கூறியதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.


ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து கட்சியின் முதலாவது பதவி நிலைகளுக்கான நியமணத்தின் போது தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையே சஜித் பிரேமதாச நியமித்திருந்ததோடு, கட்சியின் அப்போதைய மற்றும் எதிர்கால நலன் கருதி அத்தவிசாளர் பதவியை முன்னாள் இராணுவ தளபதிகளில் ஒருவரான பொன்சேகா அவர்களுக்கு விட்டுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.