Header Ads



JVP க்கு வாக்களிப்போம் என்றவர்களை காணவில்லை, சஜித் தரப்பு அமைதியாக இருக்கிறார்கள்


பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட பல்வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று (20) நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,


அன்றைய தினம் நாட்டில் உள்ள பெருந்தொகையான மக்கள் தமது வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அவர்களை இன்று காணவில்லை. மற்றொரு பகுதியினர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்தனர்.


இன்று அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். நாம் முன்னெடுத்த வலுவான வேலைத்திட்டங்களினால் அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. நாம் உருவாக்கிய சக்தியை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனால் எங்களின் செயற்பாட்டை நாம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்.


மக்கள் விடுதலை முன்னணி,ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட குழுக்கள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தொலைநோக்குடைய, தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. இவர்கள் போலிப் பிரசாரம் செய்வதையும் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். பொய் சொல்வதால் நாட்டை முன்னேற்ற முடியாது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

20.07.2024

No comments

Powered by Blogger.