Header Ads



தேர்தல் முறைகேடுகள் ஆரம்பம் - கிழக்கு ஆளுநர் மீதும் குற்றச்சாட்டு


மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.


தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெறாத நிலையில், அரசாங்கத்தின் சில அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு உள்ளுர் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை என்ற போதிலும் தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சில நியமனங்களை வழங்கி வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.


அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் கோரியுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் உடன் தலையீடு செய்து தடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை, நாட்டில் இதுவரையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.