Header Ads



ஹப்ஸா அரபுக் கல்லூரி "தீ" அறிக்கைகள் கிடைக்கவில்லை என அமைச்சு கைவிரிப்பு


வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி திடீர் தீ விபத்துகள் சம்பந்தமான இரசாயன பகுப்பாய்வாளர், மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


வெலிகம கல்பொக்கை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி கட்டிடத்தில் கடந்த 2024.04.29 மற்றும் அதற்கு முன்னதாக 2024.03.03 ஆம் ஆகிய திகதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள், உடமை சேதம்  என்பன பற்றி விசாரணை நடாத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


அதன் பிரகாரம் பூர்வாங்க விசாரணைகளின்படி இரண்டு தீ விபத்துக்கள் சம்பந்தமான அறிக்கைகள் மாத்தறை நீதவான்(Magistrate)  நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கைகள் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லையென்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


2024.04.29ம் திகதியன்று பிரஸ்தாப அரபுக் கல்லூரிக் கட்டிடத்துக்கு மேலாக  ட்ரோன் கெமராவொன்று ஜேர்மன் பிரஜை யொருவரால் பறக்க விடப்பட்ட விடயம் சம்பந்தமாகவும், தீ விபத்து நாசகாரச் செயலா அல்லது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டதா என்ப து பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு நாசக்கார செயலாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கடந்த ஏப்ரல் 29ம் திகதி இந்த அரபுக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்ட தினமே இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  வெலிகமைக்கு அவசர விஜயம் மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.