Header Ads



இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரின், கொலை பற்றி வெளியான தகவல்


19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக விளையாடிய 'ஜொண்டி' எனப்படும் தம்மிக்க நிரோஷன நேற்று (16) இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.


அம்பலாங்கொட, போகஹவத்த, கந்த மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் முன்பாக நேற்று இரவு 9.30 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.


குறித்த நபரை குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


வீட்டிற்கு அருகில் உள்ள வெற்று நிலத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நடந்தே தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக உயிரிழந்தவர் வீட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


'ஜொண்டி'  என அழைக்கப்படும் தம்மிக்க நிரோஷன 41 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாவார்.


2002 இல் 19 வயதுக்குட்பட்ட இலங்கை  கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இவர் விளையாடியுள்ளார்.


அதன் பின்னர் அவர் வெளிநாட்டில் இருந்ததாகவும், மீண்டும் வெளிநாடு செல்லும் நோக்கில் தற்போது இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


வீட்டின் அருகே உள்ள வெற்று நிலத்தில்  சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக வீட்டில் இருந்த ஒருவர் சொன்னதை அடுத்து தம்மிக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.


உயிரிழந்தவர் இறுதிச் சடங்குகளில் சூதாட்டம் நடத்தும் நபர் எனவும்,  சிறிது காலத்திற்கு முன்பு ஏற்பட்ட சூதாட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இதற்கு முன்னரும் இவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.