Header Ads



ரணிலின் அன்பளிப்பை ஏற்க வேண்டாம் - கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள மு.கா.


ஆளுநரின் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள்.


ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை  பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர்  அறிவித்துள்ளார்.


இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு  விசேட வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஏனெனில் இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர், அவர்களின் வேட்பு மனுக்கள் இன்னும் செல்லுபடியாக உள்ளது.


மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாக நாங்கள் கருதுகின்றோம்..   இது மிகவும் தீவிரமான விஷயமாகும்., இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.


இந்த இணைப்பாளர் பதவிகளை நமது கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் பொறுப்பேற்கக் கூடாது என   கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   நமது கட்சியின் உறுப்பினர்களை இவ்வாறான பதவிகளை கொடுத்து தங்களுக்கு சார்பாக மாற்றிக்கொள்ளப்பார்க்கின்றனர்.இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துனைபோகாது.


ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு என்னால்  தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.


 கட்சியின் தீர்மானத்தை மீறி நீங்கள் செயற்பட்டால் உங்களுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.