ஜனாஸா எரிப்புக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா..? அமைச்சர் வழங்கிய பதில்
கொவிட் 19 தாக்குதலால் உயிரிழந்த மக்களை தகனம் செய்தவர்களிடம் மன்னிப்பை கோருவதற்கு அப்பால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் மற்றும் விடயம் குறித்த விசாரணை நடத்தி முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்குவோம் என எதிர்க்கட்சியினருக்கு சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை தீர்மானம் வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் தெளிவுபடுத்துமாறு கூறியிருந்தனர்.
அத்துடன், அன்று அமைச்சரவையில் இருந்தவர்கள் இதற்கு கை உயர்த்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர். உண்மையில் அன்று நான் அமைச்சரவையில் இருக்கவில்லை.
கோட்டாவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் தற்போது ஆளும் கட்சியிலும் இருக்கின்றனர், எதிர்க்கட்சியிலும் இருக்கின்றனர்.
எனவே, உங்கள் தரப்பில் உள்ளவர்களிடம் ஏன் அன்று இதற்கு கை உயர்த்தினீர்கள் என்று கேளுங்கள், எங்களுடைய தரப்பிலுள்ளவர்களிடமும் நான் கேட்கிறேன்.
அப்போது உலக சுகாதார ஸ்தாபனத்தில் வழிகாட்டல்களே பின்பற்றியிருக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகவும் இருந்தது.
ஏன் இதனை செய்தனர், மன்னிப்பு கோரலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு வழங்குவது என்பது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவேன். அத்துடன், சுகாதார அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய அமைச்சுகளிடமும் இதனை முன்வைத்து அறிக்கையொன்றை தருகிறேன் என்றார்.
Vidivelli
Post a Comment