Header Ads



ரணிலுக்கு ஆதரவளித்தால் கடும் நடவடிக்கை - 68 பேர் மொட்டுவின் தீர்மானத்திற்கு ஆதரவு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.


பொதுஜன பெரமுன கட்சி எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மீறும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்நிலையில் மகிந்தவின் தீர்மானத்திற்கு 11 உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராமவில் இன்று பிற்பகல் இந்த விசேட அரசியல் சபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


இந்த விசேட கலந்துரையாடலுக்காக பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சபை உறுப்பினர்கள் பட்டியலில் 82 உறுப்பினர்கள் இருந்ததாகவும் அவர்களில் 79 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்கும் யோசனைக்கு அங்கிருந்த 11 உறுப்பினர்களே எதிர்ப்புத் தெரிவித்தனர்.


இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியில் வெளியில் ஒரு வேட்பாளரை ஆதரிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 06 பேர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கூட்டத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னர் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியால் முன்வைக்கப்படும் வேட்பாளர் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments

Powered by Blogger.