Header Ads



கொலை தொடர்பில் குழப்பிப் போயுள்ள பொலிஸார்


ஹொரணை பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலையில் கறுப்பு ஆடை அணிந்து முகத்தை மூடியவாறு நுழைந்த இனந்தெரியாத இருவர் படுக்கையில் இருந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹொரணை மேவனபலனை சிரில்டன் தோட்டத்தின் உதகந்த பகுதியைச் சேர்ந்த ரமணி சகுந்தலா என்ற 58 வயதுடைய இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கொலை செய்யப்பட்ட பெண் பங்களாதேஷ் நாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சில காலங்களாக தனது தங்கையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இங்கிரிய ஹல்வத்துர பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயான இளைய சகோதரியும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் தங்க வந்திருந்த நிலையில், நேற்று இருவரும் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றதாக சகோதரியின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


கொலை செய்யப்பட்ட பெண் வீட்டின் அறையொன்றிலும், அவரது சகோதரி சமையலறைக்கு அருகிலுள்ள அறையொன்றிலும் உறங்க சென்றுள்ளனர்.


நள்ளிரவு 1.30 முதல் 1.45 மணிக்குள் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரும் தங்கையின் கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்து விட்டு பக்கத்து அறைக்கு சென்று அக்காவை கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்கப் பொருட்கள் அதே நிலையில் இருந்த போதிலும் கொலையாளிகள் வீட்டின் அலமாரியை வெளியே இழுத்து தங்கப் பொருட்களையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


கொலையாளிகள் வீட்டிற்குள் நுழைந்த விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், கதவு அல்லது ஜன்னல் எதுவும் சேதமடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.