Header Ads



கொலைக் குற்றவாளியை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோயல் பார்க் கொலை வழக்கில் இருந்து டொன் சமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு வழங்கிய மன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கொலைக் குற்றவாளியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.


எவ்வாறாயினும், சிங்கப்பூருடன் இதுவரை கைதி பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படாததால், இலங்கையின் முயற்சிகள் இந்த விடயத்தில் தோல்வியடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டு நாடுகளின் சம்மதத்துடனேயே இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும். முன்னதாக இலங்கை பல நாடுகளுடன் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.


ரோயல் பார்க் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருந்த ஜெயமஹா, நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக 2019 நவம்பர் 15 அன்று இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜயமஹா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பெற்ற உடனேயே 2019 நவம்பர் 13 அன்று கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இந்தநிலையில் மன்னிப்புக்குப் பின்னால், அவர் உத்தியோகபூர்வமாக நாட்டில் இருந்து வெளியேறியமையால், இப்போது தேடப்படும் கைதி என்று சில நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் மட்டுமே கோர முடியும்.


அத்துடன் அவரை நாட்டிற்கு நாடு கடத்துமாறு கோர முடியும் என்று பொலிஸ் பேச்சாளர்; நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.