Header Ads



இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு, சேவை செய்வதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்



சவூதி அரேபிய இராச்சியம், அதன் நிறுவனர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சஊத் அவர்களது காலத்திலிருந்து, இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் அவர்களின் காலம் வரை, அதிக எண்ணிக்கையிலான ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு புனிதத் தலங்கள் மற்றும் மற்ற புனித இடங்களை விரிவுபடுத்தி, அங்குள்ள வசதிகளை மேம்படுத்தவும், நவீன சேவைகளை வழங்கவும் தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. யாத்ரீகர்களுக்கு சேவை செய்வது என்பது சவூதி அரேபிய இராச்சியத்தின் தலைமைத்துவத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். சவூதி அரேபியாவின் அனைத்து மன்னர்களும் இதை தமக்குக் கிடைத்த சிறப்பாகக் கருதி வருகின்றனர்.


சவூதி அரேபிய இராச்சியம், அதன் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், அதிகரித்து வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, இரண்டு புனிதத் தலங்களின் விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், புனிதத் தலங்களின் பரப்பளவை அதிகரித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட போக்குவரத்து அமைப்புகளை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இது யாத்ரீகர்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதோடு, அவர்களின் வசதிகளையும் உறுதி செய்கிறது.


பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் அறிவித்த "விஷன் 2030" யின் கீழ், சவூதி அரேபியா இறைவனின் விருந்தினர்களுக்கு சேவை செய்ய பல திட்டங்களை வடிவமைத்துள்ளது, அதில் முக்கியமானது "கடவுளின் விருந்தாளிகள்" திட்டம். இந்த திட்டம், ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் அனுபவங்களின் தரத்தை மேம்படுத்துவதையும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்தி வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்த சேவைகளின் பயனைப் பெற முடியும்.


நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலம் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு அதி சிறந்த சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளை இந்த "விஷன் 2030" உள்ளடக்கியுள்ளது. திறன்பேசிகளின் பயன்பாடுகளைப் பயன்படுத்தி, யாத்ரீகர்கள் கிரியைகள் மற்றும் கிடைக்கக்கூடிய சேவைகள் பற்றிய துல்லியமான மற்றும் நிகழ்நேர தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மின்னணு ஹஜ் மற்றும் உம்ரா விசா வழங்குதல் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா நடைமுறைகளை நெறிப்படுத்த மின்னணு முன்பதிவு முறையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.


உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சவூதி அரேபிய இராச்சியம் அதிக முன்னுரிமை அளிக்கிறது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் என்பன அதிநவீன உபகரணங்களுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே, எந்தவொரு அவசரநிலையையும் கையாளத் தயாராக பயிற்சி பெற்ற மருத்துவக் குழுக்களுடன் பணியாளர்கள் உள்ளனர். மேலும் , யாத்ரீகர்களைப் பாதுகாக்கவும், கிரியைகள் சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பாதுகாப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


புனித தலைநகரின் நகர சபை,  2024 ஆம் ஆண்டிற்கான ஹஜ் திட்டத்தை தயாரித்துள்ளது, இது 11,800 ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களால் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் புனிதப் பிரதேசங்கள் முழுவதும் 28 நகராட்சி சேவை மையங்களை நிறுவியுள்ளனர். இந்த மையங்கள் 24/7 செயல்படும் மற்றும் தேவையான மனிதவளம் மற்றும் தளவாட ஆதரவுடன் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, அவசரகால சூழ்நிலைகளைக் கையாள மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைகள், உணவுக் கடைகள், உணவகங்கள் மற்றும் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேற்பார்வையிட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.


சுகாதாரத் துறையைப் பொறுத்தவரையில் , சுகாதார அமைச்சகம் 16 மருத்துவமனைகள் மற்றும் 123 சுகாதார மையங்களையும், மக்கா மற்றும் புனித தளங்களில் 5 பருவகால சுகாதார மையங்களையும் தயார் செய்துள்ளது. இம்மையங்களுக்கு, அஜ்யாத் அவசர மருத்துவமனை, அல்-ஹராம் மருத்துவமனை மற்றும் மக்காவில் உள்ள புனித மசூதியின் தாழ்வாரத்தில் அமைந்துள்ள 3 சுகாதார மையங்கள் மற்றும் மக்காவில் உள்ள புனித மசூதியின் மையப் பகுதிக்கு அருகிலுள்ள இரண்டு சுகாதார மையங்கள் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

அவசரகால நிலைமைகளைப் பொறுத்தவரையில்,  நிம்ரா பள்ளி , அராஃபத்தின் ஜபல் அல்-ரஹ்மா மற்றும் மினாவில் உள்ள ஜமாரத் பகுதி ஆகியவற்றில் 33 துணை ஆம்புலன்ஸ் குழுக்களுடன் 155 உயர் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்படுகள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்ய 24/7 தயார் நிலையில் இருக்கும்.


யாத்ரீகர்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் உச்ச ஆணையம், இறைவனின் விருந்தினர்களை ஏற்றிச் செல்ல 3,500 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேருந்துகள் ஹஜ் பருவ காலத்தில் 12 மில்லியன் பயணங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது "மஸ்ஜித் அல்ஹரம்" ஐச்  சுற்றியுள்ள ஒன்பது நிலையங்கள் வழியாக போக்குவரத்துச் சேவைகளை வழங்குகிறது. "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் மினாவிற்கும் "மஸ்ஜித் அல்ஹரம்" இற்கும்  இடையில் யாத்ரீகர்கள் செல்வதற்கு வசதியாக 12 வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தைப் பொறுத்தவரையில், அது தற்போதைய ஹஜ் பருவ காலத்தில் யாத்ரீகர்களின் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது.


இந்த ஹஜ் பருவ காலத்தின் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, மஸ்ஜித் அல்ஹரம் மற்றும் நபிகள் நாயகத்தின் மதீனாப் பள்ளிகளுக்கான மத விவகாரங்களை தலைமையகம் "மனிதாபிமானம்" என்ற ஒரு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. இறைவனின் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மனிதாபிமானமாக்குவதன் மூலம் அவர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதே இதன் நோக்கமாகும். யாத்ரீகர்களில் நோயுற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைப் பராமரித்தல், அவர்களுக்குப் பொருத்தமான வழிபாட்டுச் சூழலை உருவாக்குதல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.


சவூதி உள்துறை அமைச்சகம், இறைவனின் விருந்தினர்களுக்கு உதவுவதற்கான பல முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விசாவில் சவூதி அரேபியாவுக்குள் வருபவர்களுக்கான டிஜிட்டல் அடையாள சேவை மிகவும் முக்கியமானது. சவூதி அரேபிய இறைச்சியத்தின் "விஷன் 2030" இன் இலக்குகளுடன் இணங்கி, மனிதகுலத்திற்கு சேவை செய்ய, டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி உள்ளது.


இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத், 88 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய 2,300 யாத்ரீகர்களை தனது விருந்தினர்களாக அழைக்க உத்தரவிட்டுள்ளார். இதில் 1,000 யாத்ரீகர்கள் தியாகிகள், கைதிகள், காயமடைந்த பாலஸ்தீனியர்களின் குடும்பங்களையும், சவூதி அரேபியாவில் பிரிக்கப்பட்ட சியாமி இரட்டையர்களின் குடும்பங்களையும் சேர்ந்த 22 யாத்ரீகர்களையும் உள்ளடக்கியுள்ளனர். இது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரின் விருந்தினர்களுக்கான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும்.


இறுதியாக, இறைவனுடைய புனித பள்ளிவாயில்களின் யாத்ரீகர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சவூதி அரேபிய இராச்சியம் மேற்கொண்டு வரும் விரிவான திட்டங்கள் மற்றும் நவீன முன்னேற்றங்கள் அதன் அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோருக்கு சிறந்த வெகுமதிகளை இறைவன் வழங்க பிரார்த்திக்கின்றோம். அவ்வாறே, சவூதி அரேபியா பாதுகாப்பும் செழிப்பும் நிரம்பி, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கலங்கரை விளக்கமாக நீடிக்கவும் பிரார்த்திக்கின்றோம்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

காலித் ஹமூத் அல்கஹ்தானி

No comments

Powered by Blogger.