Header Ads



ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால், பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது - கல்வி அமைச்சர்


ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.


காதுகளை மறைத்த வண்ணம் ஹிஜாப் அணிந்திருக்கும் போது சூட்சமான முறையில் காதுக்குள் கருவிகளை வைத்திருக்க முடியும்.இவ்வாறான நிலையில் தான் காதுகள் தென்படும் வகையில் அணியுமாறு குறிப்பிடப்படுகிறது என்றார்.  


பாராளுமன்றத்தில்   ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான முஜிபுர் ரஹ்மானினால் புதன்கிழமை (05)  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


முஜிபுர் ரஹ்மான் எம்.பி.கல்வி அமைச்சரிடம்  கேள்வி எழுப்புகையில்,

 

அதிபர் சேவை பரீட்சைக்கு மேல் மாகாணத்தில் தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வகையில்  பரீட்சைக்கு தோற்றியதற்காக அவர்களின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிந்த வகையில் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. பரீட்சார்த்தியின் காதுகள் தென்படும் வகையில் அவர் இருத்தல் வேண்டும் என பரீட்சை மத்திய  நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டால் அதற்கு பரீட்சார்த்தி கட்டுப்பட வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அவரை பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியேற்ற முடியும்.


மேல் மாகாணத்தில் அதிபர் பரீட்சைக்கு தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வண்ணம் பரீட்சைக்கு தோற்றியதாக குறித்த பரீட்சை நிலையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டு பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து இவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே இப்பிரச்சினைக்கு உடனடியாக  தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்  என்றார்.


இதற்கு  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது.தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதனை தொடர்ந்து பரீட்சை பெறுவேறு வெளியிடப்படும்.


காதுகளை மறைத்த வண்ணம் ஹிஜாப் அணிந்திருக்கும் போது சூட்சமான முறையில் காதுக்குள் கருவிகளை வைத்திருக்க முடியும்.இவ்வாறான நிலையில்  தான் காதுகள் தென்படும் வகையில் அணியுமாறு குறிப்பிடப்படுகிறது என்றார்.

No comments

Powered by Blogger.