Header Ads



சவூதி - இலங்கை 50 வருட இராஜதந்திர உறவு, தூதுவர் அமீர் அஜ்வத் தனது நியமனக் கடிதத்தை வழங்கினார்


தூதுவர் அமீர் அஜ்வத் தனது  இராஜதந்திர நியமனக் கடிதங்களின் திறந்த பிரதிகளை வழங்கினார். 


சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத்  தனது  இராஜதந்திர நியமனக் கடிதங்களின் திறந்த பிரதிகளை சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சர் அப்துல் மஜீத் பின் ரஷீத் அல் ஸமரியிடம் வழங்கி வைத்தார்.


பிரதியமைச்சர் அப்துல் மஜீத் -  தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை அன்புடன் வரவேற்றதுடன் சவூதி இராச்சியத்தில் அவரது பணி சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 


இதற்குப் பதிலளித்த தூதுவர் அமீர் அஜ்வத் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இலங்கைக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வேகமாக வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டியதுடன் 2024ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால இராஜதந்திர உறவுகளின் நினைவு ஆண்டாக கொண்டாடப்படுவதையும் நினைவுக்கூர்ந்தார். 


தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கையின் இராஜதந்திர சேவையில் 26 வருட அனுபவங்களைக் கொண்ட தொழில்முறையான இராஜதந்திரியாவார். 


சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெறுவதற்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயல் திட்டமிடல், அமுலாக்கல் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் உட்பட்ட செயற்திறன் மீளாய்வு, அரசியல் விவகாரம் (ஆபிரிக்க பிராந்தியம்), தூதரக விவகாரங்கள் மற்றும் அவசரகால உதவி வழங்கல் பிரிவுகளுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளராகப் பணியாற்றினார். 


வெளிவகார அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், ஆராய்ச்சி, மனிதவள மேம்பாடு மற்றும் வெளிவிவகார அமைச்சின் கடல் கடந்த நிர்வாகத்திற்குப் பொறுப்பான  பணிப்பாளர் நாயகமாகவும்  பணியாற்றியுள்ளார்.


2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் ஓமான் இராச்சியத்துக்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய அமீர் அஜ்வத் , சமகாலத்தில் எமன் குடியரசுக்கான அதிவிசேட திறமை வாய்ந்த பூரண அதிகாரம் கொண்ட தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.


2018 தொடக்கம் 2019 வரை சிங்கப்பூர் மற்றும் புரூணை தாருல் ஸலாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகராகவும், சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயத்திலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதுவராலயம் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் போன்றவற்றில் தனது இராஜதந்திர பணிகளை வகித்துள்ளார்.  


தூதுவர் அமீர் அஜ்வத் ஐ.நா. சபையின் பல சர்வதேச மற்றும் பிராந்திய மாநாடுகளில்  இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.  இலங்கையின்உ த்தியோகபூர்வ மொழிகளுக்கான தேசிய கொள்கை அமுலாக்கக் குழு (NCOLPI), வேலை வாய்ப்புக்கான இடம் பெயர்வு (Migration for Emploment) தொடர்பான தேசிய ஆலோசனை குழு (NACME), மற்றும்  தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுவின் செயற்குழு (NDMCC) உட்பட பல தேசிய ஆலோசனை குழுக்களின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையில்(Human Rights Council) ஆசிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்களின் பேச்சாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். ஐ.நா. சபையின் இனவாதம் தொடர்பான ‘டர்பன் பிரகடனத்தின்’ (DDPA) மீளாய்வு மாநாட்டின் அறிக்கையை தயாரிக்கின்ற ஐ.நா. கூட்டத்தொடரை இவர் தலைமை தாங்கியமைதாங்கி நடத்தியமை குறிப்பிடத்தக்கது. 


கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில்  சட்ட முதுமாணி (LLM) பட்டம் பெற்ற தூதுவர் அமீர் அஜ்வத் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் (BA) பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார்.   


1997 ஆம் ஆண்டு இலங்கையின்  உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாகவும்     சத்தியப்பிரமானம் செய்து கோண்டார். 


அண்மையில் இவர்  “இலங்கை - ஓமான் உறவுகள்: கடந்த காலம், நிகழ் காலம்  மற்றும் எதிர் காலம்” என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் நூலோன்றை வெளியிட்டார்.

1 comment:

  1. சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவரிடம் இருக்க வேண்டிய தகுதி, தகைமைகள் தேவைக்கு மேல் இருப்பதும் அவர் அந்த பதவி வகிப்பதற்கு அளவுக்கு அதிகமான தகுதிகளைக் கொண்டதாக இருப்பதும் மேலே உள்ள செய்திகளை வாசிக்கும் போது மிகத் தௌிவாகத் தெரிகின்றது. ஆனால் அவருடைய நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டவரின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும் போது சவூதி அரேபிய-இலங்கை இராஜதந்திர உறவுகளில் மிகவும் பெரிய விரிசல் தௌிவாகத் தெரிகிறது. ஜெனீவா இராஜதந்திர உறவுகள் சட்டத்தின் படியும் இதுவரை சவூதி அரேபிய அரசாங்கத்தின் நடைமுறையில் இருந்த இராஜதந்திர நடைமுறைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு நடைமுறை இங்கு பின்பற்றப்பட்டமை மிகவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றது. இலங்கைத் தூதுவரின் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வது அந்த நாட்டின் அரசன் அல்லது சனாதிபதிதான் . இங்கு அரசனோ, நாட்டுத்தலைவரோ அந்த நாட்டு வௌிநாட்டு அமைச்சரோ இன்றி சாதாரண அரச பதவிகள் வகிக்கும் ஒரு உதவிஅமைச்சர் தூதுவரின் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதன் இரகசியம் இதுதான். இந்த நாடு ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி கொரோனா காலத்தில் காலம் சென்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை சர்வதேச சட்டங்களையும் துச்சமாக மதித்து உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி அவர்களுடைய ஜனாஸாக்களை தீயிலிட்டுக் கொழுத்தி, சாம்பல்களை வீசியெறிந்த இனத் துவேசத்தின் உச்சத்தில் ஆட்சி செய்த கோதாபய்யாவின் மிக நெருங்கிய பிரதிநிதியும் இந்த நாட்டு மக்களின் ஆணைகள் இல்லாத ஒரு சனாதிபதியின் பிரதிநிதியான இலங்கைத் தூதுவருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய சன்மானம் இதுதான். வெறுமனே சட்டரீதியான இராஜதந்திரியாக மாத்திரம் இவருக்கு அந்த நாட்டில் செயல்படமுடியுமே தவிர அவரால் எதுவும் சாதிக்க முடியாது என்பதை சவூதி அரேபிய அரசாங்கம் தௌிவாகக்காட்டிவிட்டது. அதுமட்டுமன்றி வங்குரோத்தடைந்த, எடுத்த கடன்களைத் திருப்பிச் செலுத்த வக்கில்லாத உலகம் முழுவதும் பிச்சைப்பாத்திரத்துடன் வலம் வரும் ஒரு நாட்டுக்கு சவூதி அரேபிய அரசாங்கம் கொடுக்கும் அந்தஸ்த்து இதுதான் எனவும் சுருங்கக் கூறலாம். இது இந்த தூதுவருக்கு அது புரியாமல் இல்லை. ஆனால் புரிந்தும் செய்வதற்கு ஒன்றுமில்லை. மாதத்துக்கு உயர்ந்த சம்பளம், அபரிமிதமான சலுகைகள், ஆடம்பரமான வசதிகள் எல்லாவற்றையும் சுகமாக குடும்பத்துடன் அனுபவித்து உல்லாசமாக மூன்று வருடங்கள் மிக அதிகமாக நான்கு வருடங்களை பொதுமக்களின் வரிகளை அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்து விட்டு நல்ல பென்சனுடன் நாடு திரும்பலாம். அவ்வளவு தான் அவர் அந்த மண்ணில் சாதிக்க இருக்கும் சாதனைகள் என்பது மட்டும் உண்மையான யதார்த்தம். இலங்கையின் இராஜதந்திரத்துக்கு ஜயவே வா!

    ReplyDelete

Powered by Blogger.