Header Ads



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று  (10) வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


புத்தசாசன  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார்.


புத்தசாசன  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் கரங்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம்.முஷாரப், ஹஜ் மற்றும் உம்ரா குழுத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களும், வகுப் சபை உறுப்பினர்கள், ஹிந்து, கிறிஸ்தவ சமய திணைக்கள உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட இந்த இணையத்தளத்தை முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் அவர்களின்  முயற்சியினால்  உருவாக்க முடிந்ததுடன் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர்,  கணக்காளர் நிப்றாஸ் ஆகியோரும்  இதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டார்கள்.


இந்தப் புதிய  இணையத்தளத்தின் மூலமாக பள்ளிவாசல்கள், ஸியாரங்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள்,  ஹஜ், உம்ரா, வீசா சம்பந்தமான  தகவல்கள் மற்றும் சேவைகளை  இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.


அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களத்தையும் கணினி மயப்படுத்தி, நவீனமயப்படுத்த வேண்டும் என்ற அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இப்புதிய இணையத்தளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


www.muslimaffairs.gov.lk

No comments

Powered by Blogger.