Header Ads



வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் இன்ஃப்ளூவன்ஸா - மக்களுக்கான விசேட அறிவிப்பு


இன்ஃப்ளூவன்ஸா பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், இருமல், தொண்டை புண், தலைவலி மற்றும் சோர்வு,மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.


டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா, இந்நிலை குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.


"வழக்கமாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை என .இக் காய்ச்சல் இரண்டு உச்சநிலைகளில் பரவும்,"


“இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் நோய் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்நோய் வழக்குகள் இரட்டிப்பாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்ஃப்ளூவன்ஸா ஏ முதன்மையானது. இருப்பினும், இன்ஃப்ளூயன்ஸா பி யும் பரவலாக உள்ளது, ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.


இந்நிலையின் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ சிகிச்சையை நாடுவதன் முக்கியத்துவத்தை நிபுணர் வலியுறுத்தினார்.


இன்ஃப்ளூவன்ஸா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்.


கொழும்பு, றாகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூவன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்கு முன்னர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


அதன்படி, மாதிரிகள் தினமும் தேசிய காய்ச்சல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன.

No comments

Powered by Blogger.