Header Ads



முன்னாள் அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தனர்


ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் அரண் வேலைத்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்ற போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அமைப்பாளர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நந்தசேன ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


1993 இல் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றிய இவர், 1994 இல் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும், 2001 இல் உணவு வர்த்தகம் தொடர்பான பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.


அவ்வாறே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளருமான திலக் மகலேகம்கே அவர்களும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


1993 ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றிய பின்னர், 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர், மின்னேரிய தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றினார்.


மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொலன்னறுவை மாநகர சபையின் வேட்பாளரான எச். சமந்த பண்டார அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில்  இன்று -25- ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.