Header Ads



வளிமண்டலவியல் திணைக்களம், விடுத்துள்ள எச்சரிக்கை


வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய தாழமுக்கம் தற்போது சூறாவளியாக விரிவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


றீமால் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி வடக்கு திசையாக பயணித்து இன்று நள்ளிரவு பங்களாதேஷ் மற்றும் அதனை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடா கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேல், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.