Header Ads



நாட்டிலிருந்து தப்பியோடும் குற்றவாளிகள்


நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக 5 பாதாள உலக குழு தலைவர்களுக்கு விமான கடவுச்சீட்டு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இரண்டு பிரதி கட்டுப்பாட்டாளர்கள் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை தயாரித்துள்ளனர்.


பாதாள உலக குழு தலைவர்களான மத்துகம ஷான் மற்றும் ஹீனட்டியன மகேஷ் ஆகியோருக்கு கடவுச்சீட்டு தயாரித்த சம்பவத்துடன் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த ஐந்து பாதாள உலக தலைவர்களில் கொஸ்கொட சுஜீ, ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆபத்தான நபர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் கும்பலை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹீனட்டியன மகேஷ் மற்றும் மத்துகம ஷான் ஆகியோருக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அதிகாரிகளும் கைது  செய்யப்பட்ட  போது, ​​விசாரணைகளை தடுப்பதற்காக தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.


பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

No comments

Powered by Blogger.