Header Ads



கோட்டாபயவின் நூலில் இருந்து, சில முக்கிய விடயங்கள்


“ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன்.”


இவ்வாறு தமது பதவி விலகல் அனுபவத்தை புத்தகமொன்றை வெளியிட்டு பகிர்ந்துக்கொண்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.


ஜனாதிபதி பதவியிலிருந்து தான் எவ்வாறு வெளியேற்றப்பட்டேன் என்பது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச புத்தகமொன்றை இன்று வியாழக்கிழமை (7) வெளியிட்டார்.


“ஜனாதிபதி பதவியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள்“ எனும் பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட போது கோட்டாபயவின் வெளியேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது அனுபவித்த சோதனைகளை இந்த நூலில் அவர் விவரித்துள்ளார்.


பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது


“2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியன்று அலரிமாளிகை ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து, அனைத்து பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்வதில் முன்னெச்சரிக்கையாக இருந்தேன்.


2022 ஜூலை 9 காலை 8.00 மணிக்கு, மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், மாளிகைக்கு முன்பாக திரள ஆரம்பித்தனர்.


இதன்பின்னர் சுமார் 10.30 அளவில் பாதுகாப்புச் செயலாளரும் படைத் தளபதிகளும், என்னை வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள்.


ஏற்பாடுகளை கடற்படைத் தளபதியே மேற்கொண்டார்


ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் குழுவொன்றும் கூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் முன்னெச்சரிக்கையாக சில் அத்தியாவசிய பொருட்களுடன் நாங்கள் வாகனத்தில் ஏறி பின்வாயில் ஊடாக கடற்படை முகாமுக்குச் சென்றோம.


மறுபுறம் முன்வாயிலினூடாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.


அருகிலிருந்த கடற்படை முகாமிற்குள் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படைத் தளபதியே மேற்கொண்டிருந்தார்.


இதன்போது ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் ரணலுடன் அவசர பேச்சுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த பசில் ராஜபக்சவும் எங்களுடன் இணைந்து கொண்டார்.


கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறிய பின்னர் திருகோணமலை சென்று கடற்படை தளத்தில் அன்றைய இரவைக் கழித்து மறுநாள் (ஜுலை 11) ஹெலிகப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தோம்.


பதவியில் இருப்பேன் என ரணில் தெரிவித்தார்


அடுத்த நாள் இரவு (12 ஜூலை) மாலைத்தீவு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தேன். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாலைத்தீவு அரசாங்கம் மேற்கொண்டது.


நான் வெளிநாட்டில் இருந்ததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்தேன். அரசியல் கட்சித் தலைவர்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவியிருந்து விலகினேன்.


நாட்டில் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்கும் திறன் கொண்ட பிரதமரிடம் ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு தீர்மானித்து ரணில் விக்ரமசிங்கவிடம் அந்த பொறுப்பை வழங்கினேன்.


புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தாம் பதவியில் இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க என்னிடம் தெரிவித்திருந்தார்.


ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகையை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி தனக்கு கடிதம் எழுதியிருந்தனர்.


கடிதத்தில் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், வசந்த யாப்பா பண்டார மற்றும் டிலான் பெரேரா உட்பட பலர் கையொப்பமிட்டிருந்தனர்.


இதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி நான் பதவி விலகினேன்.


நான் பதவி விலகியதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்பதுடன், கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்பதாக நான் கூறியிருந்தேன். அதன் பிரகாரமே பதவி விலகினேன்.” என கோட்டாபய தமது நூலில் விரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.