Header Ads



கம்பஹா மாவட்டத்தை கைப்பற்றினார் ரணில்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.


மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.


2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 65.76 சதவீத வாக்குகளுடன் 13 ஆசனங்களை மொட்டுக் கட்சி கைப்பற்றியது.


மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர். அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார்.


அவர் தற்போது சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன, உபுல் மகேந்திர ராஜபக்ச, பிரதிப் விதான, மிலான் ஜயதிலக்க ஆகியோரே மொட்டு கட்சி பக்கம் நிற்கின்றனர்.


எனினும், நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே பங்கேற்றுள்ளார். கம்பஹா மாவட்டம் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது.


அந்த மாவட்டத்தில் போட்டியிட்டே அவர் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேவேளை, பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மொட்டுக் கட்சி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.


இந்தச் சந்திப்பின் பின்னர் தீர்க்கமான சில அரசியல் முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன . தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.


Tamil w

1 comment:

  1. ​மொட்டுக்காரன்களின் அரசியல் போக்கு வெறும் நகைப்புக்குரிய செயலாகவே தோன்றுகின்றது. ஆனால் அதனை ரணில் மிகச் சரியாக தனக்குச் சார்பாகப் பயன்படுத்திய போதிலும் வெறும் பெற்றோல் விலை குறைப்பு உணவுப் பொருட்களின் விலைகுறைப்பு, மின்சார விலைகுறைப்பு போன்ற அத்தனையும் அரசாங்கத்தின் போலி பொதுமக்களை ஏமாற்றும் சூழ்ச்சி என்பதும் தற்போது மிகத் தௌிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த அத்தனை ஏமாற்று வித்தைகளையும் விளங்கி மூளையை சரியான முறையில் பாவித்து பல முறை சிந்தித்து செயற்பட்டால் இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும என நம்பலாம். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இந்த நாட்டின் அரசாங்கத்தின் நடத்தை மிக மோசமானது ஆனால் அதைவிட பொதுமக்களின் நடத்தை மிக மோசமாக இருக்கின்றது. அத்தனை துறைகளையும் சூழ்ச்சி, ஊழல், போக்கித்தனம் பொதுமக்களிடையே தாண்டவமாடுகின்றது. இதற்கு மத்தியில் எமது தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் எப்படி நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம் என்பது மிகவும் கவலைக்குரிய ஆழமாகச சிந்திக்க வேண்டிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த சமூகம் சிந்தனை செய்யுமா?

    ReplyDelete

Powered by Blogger.