Header Ads



அடுத்த உபவேந்தர் யார்..?


(எஸ்.அஷ்ரப்கான்)


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின்  சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.


அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்துள்ளனர்.


புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விஷேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன்  அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார்.


தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்  மாத்திரமே விண்ணப்பித்துள்ளமை விஷேட அம்சமாகும். 


கடந்த 2021.08. 08 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது விண்ணப்பித்துள்ள ஏழு விண்ணப்பதாரிகளில் ஒருவர் ஆறாவது உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.