Header Ads



மகனை காப்பாற்றிவிட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தந்தை



புத்தளத்தில் பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக வந்த கார் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.


மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சிலாபம் பிரதான பாடசாலை ஒன்றில் 9ஆம் வகுப்பில் பயிலும் ஒரே மகனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக பாடசாலை பேருந்து வீதியை மாற்றும் வரை வீதிக்கு அருகில் காத்திருந்துள்ளார்.


இதன் போது வேகன்ஆர் ரக கார் ஒன்று அதிவேகமாக வருவதைக் கண்ட தந்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து, மகனைக் கையால் தள்ளி காப்பாற்றியுள்ளார்.


அதேநேரம் தந்தை அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, ​​கார் மோதி விபத்துக்குள்ளானது. மகன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், தந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கார் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், விபத்தில் தந்தை உயிரிழந்தமையினால் மகன் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.


தந்தையின் செய்கையால் மகனின் உயிர் நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்டதாகவும் இல்லையெனில் இருவரும் உயிரிழக்க நேரிடும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


கார் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.