Header Ads



மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரணடைவு


அநுராதபுரம், மிஹிந்தலை, திறப்பனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் இரவு மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலே திறப்பனை, இஹலகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் தடியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக, மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இத்தாக்குதலில் 23 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மனைவியை கணவன் தாக்கியுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண் சுயநினைவின்றி இருந்ததாகவும்.பின்னர் கணவர் அவரை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உறங்கச் செய்ததாகவும், காலையில் பார்த்தபோது மனைவி இறந்துவிட்டதாக சந்தேகநபரான கணவர் தெரிவித்ததாக, மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.


மிஹிந்தலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்குச் சென்ற போது, ​​உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டில் தங்கியிருந்துள்ளதோடு, அவர் பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் 32 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.