Header Ads



ஜனாதிபதியின் அதிகாரங்களை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை


பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி  ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 


'ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல்' என்ற தலைப்பில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக செயற்படுவதாகவும், ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பையும் அரசியலமைப்புப் பேரவை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி தனது அரசியலமைப்பிற்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கு செய்யப்படும் எந்தவொரு இடையூறுகளும் அரசியலமைப்பு மீறலாகவே கருதப்படும் எனவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


''அரசியலமைப்பின் 4(ஆ) உறுப்புரையின் கீழ் இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி, இலங்கையின் தேசிய பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துகிறார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நிறைவேற்று அதிகாரத்தின் பிரதானி என்ற வகையில், அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு அமையவும் ஜனாதிபதியின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பிற்கு அமையவும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அரசாங்க பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்.


எனவே, ஜனாதிபதி தனது அரசியலமைப்பு ரீதியான கடமைகளை எந்தவித இடையூறும் அல்லது தடைகளும் இன்றி செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் கீழ், பொலிஸ்மா அதிபரின் நியமனம், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே மேற்கொள்ளப்படுகிறது.


ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு அமைவான பணிகளை முன்னெடுப்பதற்கு செய்யப்படும் எந்தவொரு இடையூறுகளும் அரசியலமைப்பு மீறலாகவே கருதப்படும். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினால், அதற்கான நடவடிக்கைகளும் அரசியலமைப்பிலேயே வழங்கப்பட்டுள்ளன.''


என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனிடையே, அரசியலமைப்பு பேரவையானது அரசியலமைப்பிற்கு அமைவாக தனது கடமைகளை மேற்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பின் 41(ஈ) உறுப்புரையின் பிரகாரம், பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பான தனது கடமையை மேற்கொள்ளாமல் தவிர்க்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு பணிப்பது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சபாநாயகர் பாராளுமன்றத்தின் பிரதானி என்பதுடன், அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக மக்களின் நீதிமன்ற அதிகாரம் செயற்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


அதன்படி, பாராளுமன்றம் மக்களுக்கு மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.