Header Ads



இப்படியும் ஒரு அரசியல்வாதி


பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.


வாக்குப்பதிவின் போது தம்மை வெற்றி பெற வைக்க மோசடிகள் நடந்ததாக அவர் கூறுகிறார்.


ஜமியத்-இ-இஸ்லாமி கட்சியின் ஹபீஸ் நயீம் உர் ரஹ்மான், மாகாணத்தின் பிஎஸ்-129 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதி கராச்சி நகரில் உள்ளது.


இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தன்னை விட அதிக வாக்குகளைப் பெற்றதாகவும் ஆனால் பின்னர் அந்த வேட்பாளரின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் ரஹ்மான் கூறினார்.


மேலும், "இப்படி மோசடி செய்து தான் எங்களை ஜெயிக்க வைக்க வேண்டுமென யாராவது நினைத்தால், அதை நாங்கள் கண்டிப்பாக பொறுத்துக்கொள்ளமாட்டோம்" என்று கூறி, தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.


கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


"பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். வெற்றிக்கு தகுதியானவர் அந்த வெற்றியைப் பெற அனுமதிக்க வேண்டும், மக்களால் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும், யாரும் கூடுதலாக எதையும் பெறக்கூடாது,'' என்றார் ரஹ்மான்.


தொடர்ந்து பேசிய ஹபீஸ் நயீம் உர் ரஹ்மான், "நான் 26 ஆயிரம் வாக்குகளை பெற்றேன், சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட பிடிஐ ஆதரவு வேட்பாளர் சைஃப் பாரி 31 ஆயிரம் வாக்குகளை பெற்றார், ஆனால் இறுதி முடிவில் சைஃப் பாரிக்கு 11 ஆயிரம் வாக்குகள் மட்டுமே காட்டப்பட்டன" என்றார்.


ஹபீஸ் நயீம் உர் ரஹ்மானின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.


பிஎஸ்-129 நாடாளுமன்ற இருக்கைக்கான பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்த பிறகு, அந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


ஆனால், கடந்த வியாழன் அன்று நடைபெற்ற பாகிஸ்தானின் தேர்தல் நியாயமானதா என்பது குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.


இந்தத் தேர்தல்களில் பெரிய அளவில் வாக்கு மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவே இந்த முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.


அக்கட்சியின் தேர்தல் சின்னமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிபிசி நியூஸ்


No comments

Powered by Blogger.