Header Ads



புத்தளம் விபத்தில் மாணவன் வபாத் - திடீர் மரண விசாரணையாளரின் முக்கிய அறிவுரைகள்


- ரஸீன் ரஸ்மின் -


மதுரங்குளி - விருதோடை , எள்ளுச்சேனை பகுதியில் புதன்கிழமை (17) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.


மதுரங்குளி - விருதோடையைச் சேர்ந்த கலீல் அஹ்மட் முஹம்மது எனும் 15 வயதுடைய மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


இவர் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்தவர்.


உயிரிழந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் ஜனாஸா மீதான மரண விசாரணையை நடத்தினார்.


அத்துடன், உயிரிழந்த மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர், விபத்தினால் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஜனாஸா நல்லடக்கத்திற்காக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார்.


இதேவேளை, இளம் வயது பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


வீதியில் அதிக வாகன நெரிசல்கள் காணப்படும் நிலையில், பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லதாகும் என்றும் அவர் சொன்னார்.


மேலும், ஓய்வு நேரங்களில் தமது இள வயது பிள்ளைகளை நண்பர்களுடன் வெளியே சுற்றித் திரிய அனுமதிப்பதற்கும் பெற்றோர் இடமளிக்கக் கூடாது எனவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மேலும் குறிப்பிட்டார்.


இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.