Header Ads



பழிவாங்க செய்த நடவடிக்கை


- எம்.றொசாந்த் -


யாழ்ப்பாணம் - மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர் , பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


யாழ்ப்பாணம் - மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை பொலிஸாரின் காவலரண் மீது புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.  


கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர். 


அதன் போது, போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு , புனர்வாழ்வுக்கு அனுப்பிய சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் , ஏற்கனவே பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதன் பின்னணியில் "புலிக்குட்டி" என்பவரின் குழு செயற்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட இருவரும் " புலிக்குட்டி" குழுவை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களின் நண்பர் ஒருவரின் பதிவு திருமணத்தை முன்னிட்டு, வீடொன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போதே கைது செய்யப்பட்டனர் எனவும், பொலிஸார் கூறும் புலிக்குட்டி என்பவரை இவர்களுக்கு தெரியாது என மன்றுரைத்தார். 


அதனை தொடர்ந்து இரு சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்தது. 


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஊர்கவற்துறை பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை சம்பவம் தொடர்பில் , மேலும் நால்வரை கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர், 

No comments

Powered by Blogger.